பக்கம்:அறியப்படாத தமிழகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

'அழகர் கோயில்' நூலோ, தலைப்பு ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கக் கூடியது. இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மட்டுமல்லாமல், நாட்டார் வழக்காறுகள், கள ஆய்வுச் செய்திகள் முதலானவற்றின் அடிப்படையில், குடியிருப்புகளுக்கு வெளியே தனித்து நிற்குமொரு சமூகப் பண்பாட்டு நிறுவனத்திற்கும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் (சாதிகள்) இடையிலான உறவைப் புதிய கோணத்தில் ஆராய்கின்றது. நூலின் மைய இழைக்கு அரணாகவும் இடைப்பிறவரலாகவும் ஆங்காங்கே இறைந்து கிடக்கும் நுட்பங்களும் இடை வெட்டுகளும் நூலுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கின்றன. தற்பொழுது அந்நூல் பெற்றிருக்கும் கவனத்தை விட மேலதிகமான கவனத்தைப் பெறும் தகுதியுடையது என்பதோடல்லாமல், அதே சட்டகத்தை ஒட்டியும் வெட்டியும் பிற கோயில்களை ஆய்வு செய்வதற்கும் அதனை முன் மாதிரியாகக் கொள்ளலாம்.

இளமையில், ஏறத்தாழ முப்பது வயதிற்குள் இப்படிப்பட்ட தொரு ஆய்வை நிகழ்த்திக் காட்டியவர் அதன்பின், இந்தப் பதினைந்து இருபது ஆண்டுகளில் எழுதியுள்ளவை, 'அழகர் கோயில்' தூண்டிவிட்ட பெரும் ஆவலுக்கு நிகராக இல்லை. சிட்டி, சிவபாதசுந்தரம் எழுதிய 'தமிழ்ச் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்', 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ எழுதிய கூர்மையான மதிப்புரைகள் சலசலப்புடன் கூடிய கவனத்தைப் பெற்றன. அவ்வப்போது 'ஆராய்ச்சி' முதலான இதழ்களில் எழுதிய கட்டுரைகள் தஞ்சை எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி 'தெய்வங்களும் சமூக மரபுகளும்' என்ற பெயரில் நூலாக்கம் பெற்றன.

தொ.பரமசிவனின் ஆர்வங்களையும் அக்கறைகளையும் ஆய்வு நெறியினையும் ஓரளவுக்குக் காட்டும் கட்டுரைகள் - குறிப்பாகத் தமிழ் வைணவம், மாற்று மரபுகள், மதுரைக் கோயில் நுழைவு - அதில் உண்டெனினும் அவரது முழு வீச்சினையும் அவை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன என்று சொல்ல முடியாது.