பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அறிவியல் திருவள்ளுவம்

ஈ. வான அறிவியல் பொதிவு

அறிவியல் என்பது ஒரு பொதுத்துறை. பொறியியல், உளவியல், உயிரியல், கணக்கியல், உடலியல், உளவியல் எனவெல்லாம் பல துறைகளில் கண்டுபிடிப்புகள் நேர்கின்றன. எப்பெயர் பெரினும் அவ்வொவ்வொன்றும் அறிவின் நுண்ணிய செயற்பாட்டால்தான் விளைகின்றது. எனவே. பொறி அறிவியல், உள அறிவியல், வான அறிவியல் என்றெல்லாம் அறிவியல் துறையாகவே கொள்ளப்படும்.

இவற்றுள் வான அறிவியலைச் சற்று விளக்கமாகக் கண்டு அதன் திருக்குறள் அடையாளத்தைக் காணலாம்.

வானம் என்பது எல்லையற்றுப் பரவியுள்ளது. நிறமற்றது; இடமற்றது. எண்ணற்ற விண்மீன்கள், உடுக்கள், கோள்கள் பரவிச் சிதறி இயங்கும் வெட்டவெளி கொண்டது.

ஞாயிற்றிலிருந்து கோள்கள் சிதறித் தனித்தனிக் கோள்களாக இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று நாம் வாழும் நிலம் என்னும் பூவுலகம். இதற்கொரு தனிச் சிறப்பு உண்டு. உயிரினங்களைப் பெற்றிருக்கும் ஒரு கோள் இப்பூவுலகம். பிற கோள்கள் சிலவற்றில் உயிரினம் இருக்கலாம் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து வருகின்றனர் வானியலார்.

பூவுலகில் மட்டும் உயிரினம் உள்ளமைக்கு மூலக் காரணம் எது? நெருப்பு, நீர், காற்று. மண் என்பவை காரணங்களே. ஆனால், உயிரினம் மூச்சுவிட்டு உயிர்வாழ இன்றியமையாத துணை மூலமாக இருப்பது காற்றுதான். இக்காற்று ஏது? எங்கிருந்து வந்தது: பூவுலகைச் சுற்றியுள்ள சூழல் இக்காற்றுக்குத் துணைக் காரணம். வளி