பேச்சாளனின் எழுத்துரை
வணங்கி மகிழ்கின்றேன்.
- உலகம் அறிவியலின் உறைவிடம்;
- அறிவியல் உலகத்தின் உயிர்மூச்சு;
- “உலகம் தழீஇயது ஒட்பம்”
என்னும் திருவள்ளுவர் வாய் மொழி இவை இரண்டின் புதையல். இவ்வாறு எழுதுவதை மிகைபட எழுதுவதாகவோ ஆர்வத்தை மட்டும் வெளிப்படுத்துவதாகவோ கருதுவோர் நூலினுள் புகுந்து வெளிவரின் புதையல்தான்' என்று ஒப்புவர்.
அறிவியல் திருவள்ளுவம் அறிவியல் திருமகனாரின் அணிந்துரையால் அழகில் திகழ்கிறது. -
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் க. ப. பொன்னுசாமி அவர்கள் இவ்வறிவுப் பொலிவை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். துணைவேந்தரவர்கள்.
- அறிவியல் நெறித்துலாக்கோல்;
- தமிழுணர்வின் தனிப்பேழை;
- தூய உள்ளத்தின் துணிபொருள்;
நேர்மைப் பாங்கின் நிலைப் பொன். என் பால் பேரன்பும், பெருந்தகவும் நிறைந்த இனியவரின் நெஞ்ச வைரத்தை என் நன்றிப் பொன்னால் தாங்குகின்றேன்.
திருவள்ளுவர் நம்முன் தம்மை நிறுத்திப் பேசும், பட்டறிவுக் குறட்பாக்கள் மூன்று. ஒன்றில் அமைந்த 'அறிவறிந்த' என்னும் சொல் அறிவியலின் அறிமுகச் சொல்லாக அமைந்துள்ளமை தெளிவாக்கப்பெற்றுள்ளது. 1. ஒட்பம்-அறிவொளி.