பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


(நுண்மையாய்) இருக்கும் நிலையில் - அஃதாவது, உலக உற்பத்திக்கு முன்னர் - அதனுள் இறைவன் அந்தர்யாமியாய் சங்கற்பத்தோடு நின்று இருக்கும் நிலையில் இறைவன் உலகிற்கு முதற்காரணமாகின்றான். இங்ஙனம் நுண்ணிய நிலையில் இருக்கும் அசித்தை வெளிப்படுத்த 'உலகப்படைப்பு செய்வோம்' என்று இறைவன் எண்ணுகின்ற நிலையில் இறைவன் உலகிற்கு நிமித்த காரணமாய் அமைகின்றான். இறைவனுடைய ஞானம், சக்தி முதலியவையே துணைக்காரணமாகின்றன. ஆக, இம்முறையில் இறைவன் உலகப் படைப்பிற்கு மூன்று காரணமாய் உள்ளான் என்று மெய்விளக்க அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். இக்கருத்தினை ஆழ்வார் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

“நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
        வித்தும்ஆய் முதலில் சிதையாமே
மனஞ்செய் ஞாலத்து உன்பெருமை
        மாசு ணாதோ மாயோனே.”22[1]

“தானோர் உருவே தனிவித்தாய்த்
        தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
        மற்றும் மற்றும் முற்றுமாய்.”23[2]

என்கின்ற பாசுரப்பகுதிகளிலும் வேறு பல பாசுரப்பகுதிகளிலும் இதனைக் கண்டு தெளியலாம்.

மேற்குறிப்பிட்ட மூன்று காரணங்களுள் இறைவன் உலகிற்கு முதற்காரணம் என்பது மிகவும் முக்கியமானது. காரணப்பொருள் பின் காரியப் பொருளாய் மாறுவது முதற்காரணம் என்பது பொது விதி. இங்கு இறைவனே இவ்வுலகப் பொருளாய் மாறினான் என்றால், அங்ஙனமன்று. இவ்வுலகப் பொருள்களுக்கு அவற்றின் நுண்ணிய நிலை, முதற்காரணம்; பருப்பொருளாய் மாறிய நிலை, காரியம்; ‘இல்லது வாராது, உள்ளது சிதையாது’ என்பது தத்துவம். வேதியியல் உண்மையும் இதுவே, இறைவன் நுண்ணிய நிலையிலுள்ள அசித்தின் உள்ளேயும் அந்தர்யாமியாய் உள்ளான்; பருப்பொருளாய் உள்ள நிலையிலும் அந்தர்யாமியாய் உள்ளான். நுண்மையான அசித்தில் இறைவன் அந்தர்யாமியாய் இருக்கும் நிலை முதற்காரண நிலையாகும்.


  1. 22. திருவாய் 1.5 : 2
  2. 23. திருவாய் 1.5 : 4