உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அன்றி இதனினும் சிறந்த பிறிதோருடம்பு நாம் கேளாமலே வந்து கிடைத்தாலும் இப்பொழுது பெற்றுள்ள பேய்வடிவாகிய இதனையன்றி வேறெதனையும் விரும்ப மாட்டோம் எ-று.

ஈது - நற்கணத்துள் ஒன்றாய இப்பேய் வடிவு. நற்கணத்துள் ஒன்றாய நாம் நமக்கு ஈது உறினும் உறா தொழியுமேனும் பிறிதொன்று பெறினும் யாதும் வேண்டேம் என இயைத்துரைக்க. இங்ஙனம் இறைவனுக்கு அடித் தொண்டராக அணுகி நின்று போற்றி மகிழும் பேறு, முத்தி நிலையிலும் வாய்ப்பதரிதாகலால் நற்கணத்திலொன்றாய இப்பேய்வடிவே தம் உள்ளத்திற்கு உவகை அளிப்பதென அம்மையார் அருளிச் செய்தமை, ‘கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறவின் விளங்கிய’ அவர்தம் பேரன்பின் திறத்தைப் புலப்படுத்துவதாகும். சிறிது உணர்த்தி - சிறிதே விழிக்கச்செய்து.

நாமாலை சூடிய நம்மீசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் — நாமோர்
அறிவினையே பற்றினா லெற்றே தடுமே
யெறிவினையே யென்னு மிருள். (87)


இ-ள்: இறைவனுக்குத் தொண்டு பூண்ட அடியார்களாகிய நாம் நம்மையுடையவனாகிய இறைவன் திருவடிக்கே சொன்மாலை சூடிப் போற்றியும் நறுமணம் வாய்ந்த மலர்மாலை கொண்டு அணிந்தும் இறைவனது திருவடி ஞானமாகிய மெய்யுணர்வினையே பற்றுக்கோடாகப் பற்றி ஒழுகுவோமானால் கருவியாற் பிளந்து எறிவதுபோலும் தீவினையாகிய இருள் நம்மை வருத்துமோ? அவ்விருள் நம்பால் நிற்பது எங்ஙனம்? நில்லாது இறந்தொழியுமன்றே எ-று.