பக்கம்:அலைகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 O லா. ச. ராமாமிருதம்

 “நீ சொன்னபடித்தானே அம்மா நேரமாய் வந்தேன்!” என்று சிரிப்பாள். ஆனால், வருகிறபடி வந்து சுவாரஸ்யமான விடி நித்திரையைக் கலைத்துக் கொண்டிருந்தாள்.

‘காரியம் நறுவிசோ இல்லையோ, சதா ஏதாவது செய்து கொண்டிருக்கணும். ஒழித்துப் பெருக்குதல் என்பதே அவளுக்கு ஒரு வெறியாயிருக்கிறது’. ஒரு நாள் சோப்பு, சீப்பு வைக்கும் அலமாரியில் நான் விழித்துக்கொள்ளப் போகிறேன்’ என்று பஞ்சாமி இரைவான்.

ஒரு சமயம் பஞ்சாமி ஆபீஸிலிருந்து வேலைசெய்ய வீட்டுக்குக் கொண்டு வந்திருந்த முக்கியமான பேப்பர். மறுநாள் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பும் வேளைக்கு காணோம். பஞ்சாமிக்கு உடல் பதறிவிட்டது. முதலில் அதை வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கக்கூடாது. கேட்டிருந்தாலும் துரை அனுமதித்திருக்கமாட்டான். அத்துடன் வந்திருப்பவன் புதிசு, அவன் புது ஜோரில், இன்று திட்டத் தொடங்காமல் நல்ல நாளாய்ப் போகணுமே என்று ஒவ்வொரு நாளும் கதி கலங்கும் நாட்கள். வீட்டையே தகர டப்பாபோல் தலை கீழாய்க் கொட்டித் தேடி, வாசலில், கார்ப்பரேஷன், வீட்டுக்கு வீடு தாராளமாய் அளித்திருக்கும் சிமிட்டிக் குப்பைத் தொட்டியை ஆராய்ந்தபின், மூலைப் பிள்ளையாருக்கு ஒரு சதிர்த் தேங்காய் சுசி வேண்டிக் கொண்டபின், பேப்பர்க்காரனுக்கு நிறுத்துப் போடக் கட்டி வைத்திருக்கும் தினசரி பேப்பர்க் கட்டில் சொருகியிருந்தபடி அகப்பட்டது. பஞ்சாமிக்கு சீற்றம் கட்டுக்கடங்கவில்லை

“என் அறையை யாரும் பெருக்க வேண்டியதில்லை, அதில் எதையும் ஒழித்துப் பெருக்க வேண்டியதில்லை, என் குப்பையிலேயே நான் புதைந்து, மூச்சுத் திணறிச் செத்து நாறிப் போனால் போகிறேன். என்னை யாரும் எடுக்கவேண்டியதில்லை” என்று உத்தரவுவிட்டான்.

அதற்கு அவனுக்குக் கிடைத்த பதில், கூஜாவிலிருந்து கிளுகிளுக்கும் தண்ணீர்ச் சிரிப்புத்தான். ஆண்டாளுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/110&oldid=1288265" இலிருந்து மீள்விக்கப்பட்டது