144 O லா. ச. ராமாமிருதம்
எந்தக் கொடுமை பொது? இவள் இப்படியே மூளை கலங்கி இருப்பதா? நினைவு மீள்வதா?
இவள் இப்படியே போய்விட்டால் எவ்வளவு நல்லது?
இவளுடைய கடவுள், இவள் பிடித்திருந்த காலாலேயே இவளை எட்டி உதைத்தாயிற்று. இவள் ஏன் இன்னும் இருக்கணும்?
அவனே இருக்கிறானோ? இருந்தால், இப்படி எட்டி உதைப்பதால்தான் இருக்கிறானோ?
வேறே இங்கு என்ன இருக்கிறது?
கோவில் இருக்கிறது.
கோவிலுக்கு வருவோரும் போவோரும் இருக்கின்றனர், அப்புறம் தேங்காய், பழம், வெற்றிலை, கற்பூரம் இருக்கின்றன. (இலக்கணம் நாசமாய்ப் போக!)
நம்பினவாளுக்கு நடராஜா.
வேப்பிலை மாமி, ரங்கசாமி வாத்தியார், அபிதா, எல்லோரும் நம்பினவர்கள்தான். ஆனால் அவர்கள் கண்டது எமராஜா.
எமராஜா தான் நிஜ ராஜா.
‘அம்மம்மா கண்டெடுத்தேன்,
அப்பப்பா காணோமே!
எல்லாம் காக்கா ஊஷ்!”
அப்படியானால் நீ நாஸ்திகனா? என்று கேட்காதேயும்.
ஐயையோ இந்தக் கோவில் இல்லாட்டி என் கதி என்னாச்சு? என் குடும்பம் பிழைப்பதெப்படி? -
இந்த ஊர்லே என்ன இப்படி நாயும் நரியும் ஒடறதேன்னு பார்க்காதேயும். இது பாடல் பெற்ற ஸ்தலம் ஒய்! நாலு பேரும் பாடியிருக்கா ஒய்! ஒரு தை வெள்ளி, ஒரு ஆடி வெள்ளி, ஒரு கிருத்திகை, ஒரு அமாவாசை, இந்த வாசற் குறடு உள்ளே முற்றம்வரை இருநூறு சைக்கிளுக்குக் குறையாமல் நிற்கும். அத்தனையும் அடியார்கள்.