பக்கம்:அலைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் O 207



ஒருவருக்கொருவர் உடல்வழி ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்றாலும், நீ போனபின் என் தனிமையை உணர்கிறேன். மாலை வேளைகளில் நான் கரையோரம் நிற்கையில், என் கால்களைக் கணு வரை கழுவும் அலைகளில் அறிகிறேன். விளம்பில் என்னை நிறுத்தி விட்டு அலைகள் தாண்டிய அமைதிக்கு நீ சென்று விட்டாய். எல்லைக் கோடுகள் அழிந்த ஒன்றுடன் ஒன்றிவிட்டாய். அங்கிருந்து தனியாய்ப் பிரித்து உன்னை எப்படிக் கூப்பிட முடியும்?

சிக்காமு, நம்மிடையில் தர்க்கம் நேரிடும் போது-நம்மிடையில் தர்க்கம் இல்லாத நாள் உண்டோ? உன்னை ஒரிரு தரம் கைகூட மிஞ்சிவிட்ட வெட்கத்தில், அந்த நினைவின் வேதனையில் இப்பொழுது தலை குனிந்து உனக்கும் என்ன பயன், எனக்கும் என்ன சாந்தி?-நம்மிடையில் தர்க்கம் நேரிடும்போது, நீ எதிர்வாதாடும்போது கேட்பாயே “என்னைக் கரிக்கணும்னு தானே கட்டிண்டேள்?’ என்று, அதிலும் ஒரு உண்மை யிருக்கிறதோ? கரிப்பதற்காவது ஒரு ஆள் வேண்டித்தான் இருக்கிருக்கிறது, தனிமையோ வேண்டியில்லை. அப்போது அக்கரிப்பும் எதிர்த்துருவங்களின் ஈர்ப்பேயன்றி கரிப்பாமோ?

“ என்ன தாத்தா உனக்கே என்னவோ பேசிக்கறே?”

"பேசிண்டேனா என்ன? அது கூட எனக்குத் தெரிய வில்லை.”

"என்ன தாத்தா அழுவறே?’’

“அழுவறேனா!" கண்ணைத் துடைத்துக் கொள்கிறேன். ஆம், இமைகள் நனைந்திருக்கின்றன.

“தாத்தா நேரமாவல்லே, நீயாச்சும் தனியா குந்திட்டிருக்கையே! தாத்தா! முவம் உனக்கு ஏன் திடீர்னு இவ்வளவு துயரமாப் போச்சு? தண்ணிலே விழப் போறியா? உன்னைப் பார்த்தா எனக்குத் திடீர்ன்னு பயமாயிருக்குது, தாத்தா!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/209&oldid=1285367" இலிருந்து மீள்விக்கப்பட்டது