பொல பொலவெனப் பொழுது புலரும் வேளை கூக் குரல். ஒரே அமர்க்களம். விழித்துக் கொண்டேன். படுக்கையினின்று எழுந்து அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினேன். எதிர்வீட்டு மேலண்டை சுவரின் அருகே சந்தில் கூட்டம் அலையிரைந்து நெரிந்தது. உள்ளே புகுந்து சுவருக்கெதிரே வெளிவந்தேன். சுவரில் கன்னம். கன்னத்தின் பக்கத்தில், எடுத்த கல்லையும், மண்ணையும் ஒழுங்காய் குவித்திருந் தது. கன்னம் வைத்தவன் வேலையில் சுத்தம். சுவரின் திறந்த வாய்ச் சிரிப்பின் ஒழுங்கற்ற பற்கள் போல் கன்னத்தின் வழி அடுக்குள் சாமான்கள் தெரிந்தன.
கன்னத்தின் எதிரே வீட்டுக்கு சொந்தக்காரர்கள் வட்டமாய் நின்றனர். வீட்டுக்கார முதலியார் வழக்கப்படி முழங்காலுக்கு மேல் தூக்கி, ஒற்றை வேட்டி கட்டி, பானை வயிற்றின் மேல் கைகட்டி நின்றார். அவர் எப்பொழுதுமே பேசமாட்டார். பக்கத்தில் அவர் மனைவி கன்னத்தில் கைவைத்து நின்றாள்.
ஐயா யானைக்குட்டி.
அம்மா வெள்ளை யானைக்குட்டி.
'அத்தை! அத்தை!!’ உள்ளிருந்து மூத்த மருமகள் பதறி ஒடி வந்தாள். “ஐயோ அத்தே! ஐயோ!' மலை போன்ற மாமியை இறுகக் கட்டிக் கொண்டு அழுதாள்.
'என்னதான் சொல்லேன் அம்மே!’