பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கமலி ❖ 121


“உம்-என்ன உளறல்? ஆசைப்பட்டு வந்திருக்கேன்!”

அவர் பார்வை அவரை அறியாமலே கர்ப்பக்ருஹத்துள் சென்றது.

“அங்கே என்ன இருக்கு, கல்தான்!” கைகொட்டிச் சிரித்தாள். “நான் இங்கேன்னா இருக்கேன், அப்பா நீங்கள் வளர்த்த நான், அப்பா, நீங்கதான் சொல்லணும். மனுஷாள் என்னைக் கல்லில் பார்க்கத் தயாராயிருக்காள், ஆனால் உயிரில் பார்க்க ஏன் பயப்படறாள்?” “அவர்களுக்கே இஷ்டமில்லையா?-அவள் கண்கள் பளபளத்தன. கண்ணீரிலா?

“தேவி, என்னை-எங்களை மன்னிச்சுடு”

“ஸ்ப்!” கூம்பலில் உறைந்துபோன அவர் கைகளைப் பிரித்துவிட்டாள். அவளுடைய உடலின் உற்ற கறுப்பில் உள்ளங்கைகள் செந்தாமரை. வெள்ளை விழியோரங்களில் செந்நரம்புக் கொடி. உதடுகள் வெற்றிலைச் சிவப்பு. புருவ நடுவில் குங்குமம். நெற்றியில் சூர்யோதயம்.

“அப்பா, நான் பிறந்த வீட்டுக்கு வர ஆசைப்படறேன். என்ன முழிக்கறேள்? நான் உங்கள் வீட்டில் வந்து இருக்கப் போறேன். ஒருநாள்தான்”-சுட்டுவிரலைக் காட்டினாள்.

வாயடைத்துப் போனார். உள்ளே சந்தோஷம், பயம் இரண்டும் சேர்ந்த குழப்பம்.

“அப்பா, பொண்ணாப் பிறந்தால் பிறந்தாத்து ஆசை துப்புற விட்டுடாது.”

“பாண்டிய ராஜகுமாரி, நீ என்னை கேலி செய்கிறாய்.”

"‘கமலாம்பிகே, குழந்தே’ன்னு மூச்சுக்கு மூச்சு கூப்பிட்டது யார்?”

“அம்மா, என்னைக் கேட்கணுமா, என்னைக் கேட்காமலே என் வீட்டுக்கு வந்து உட்கார முடியாதா?”