128 ❖ லா. ச. ராமாமிர்தம்
அவள் கண்கள் அவளை நாடின. அகிலாவின் கேள்விக்குப் பதில் அங்கேதான்...கமலா பொட்டெனச் சிரித்தாள். அவள் விழிகள் கூத்தாடின.
“ஒண்ணுமில்லேம்மா, அப்பா அனாவசியமா மிரண்டு போயிருக்கார். காரணம் இங்கிருக்க, எங்கேயோ தேடினால்? சரி சரி, ரொம்பப் பசிக்கிறது. அப்பா, சோத்து மூட்டையை அவிழுங்களேன். அம்மா, எனக்கு ஊட்டிவிடறியா...?” சிரித்தாள். பருப்புஞ் சாதத்துலே நெய்யும் சர்க்கரையும் கலந்து, இது போதாது, நிறையப் பிசை. எல்லாருக்கும் சேர்த்துப் பிசை. ஒரே பாத்திரத்தில்.”
சிரித்தாள். பற்களில் நக்ஷத்ரங்கள் மின்னின. அகிலா கண்ணைக் கசக்கிக்கொண்டாள். ஒண்ணுமில்லியே!
அவள் வாயில் கவளத்தைப் போட்டதும் அகிலா ஒரு அசாத்ய பரவசத்தில் ஆழ்ந்தாள். திடீரெனச் சுரப்பில் தன் ரவிக்கை நனைந்ததை உணர்ந்தாள். அவளுக்கு அது ஆச்சர்யமில்லை. ஊட்டக் கேட்டது ஆச்சர்யம் இல்லை. எதுவுமே ஆச்சர்யமில்லை. ஒரே அன்பு வெள்ளத்தில் மூழ்கிப்போனாள்.
இப்ப நான் உங்களுக்கு ஊட்டறேன். “ஆ...ஆ...அப்பா, வாயைத் திறவுங்கோ...”
ஆ. மதுரமே! ஒரே கலம். எச்சில், தீண்டல், ஆசாரம், பூஜை புனஸ்காரம் என்ன வேண்டிக்கிடக்கு? எல்லாமே ஒரே அன்பு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போயின.
முதன் முத்தத்தின் எச்சிலில் ஆரம்பித்து
உயிர் முத்து வைத்த வித்திலிருந்து கடைசியில்
கடைவாயில் வழியும் எச்சில்வரை