2. அருள் உரிமை
தேவதத்தன் அன்னப்புள்ளை எய்தல்
உலகம் முழுதும் ஒருகுடை யின்கீழ்
ஆளும் அண்ணல் அரண்மனை யருகில்
மலர்ந்த மலர்கள் மணமிக வீசப்
பொறிவண்டு.ஆடும் பூம்பொழில் மீது,
வடதிசை இமய மாமலை அமர்ந்த (5)
வாழிடம் நோக்கி, வளரும் அன்பால்
உருகிய உள்ளம் ஒழுகிய தென்னப்
பாடியே அன்னப் பறவைகள் வான
வீதி வழியே விரைந்து சென்றன.
செல்வது கண்டு, தேவ தத்தன் - (10)
அரசிளங் குமரற்கு அண்டிய உறவினன்-
வில்லினை வளைத்து வெய்யதோர் பாணம்
எய்து நின்றனன்! எய்தஅப் பாணம்
முதன்முதலாக முன்னர்ச் சென்ற
அன்னப் பறவையின் அதன்சிறை யதனில் (15)
படவே: ரத்தம் பாயப் பறவையும்
தளர்ந்து சுருண்டு தரைவில் விழுந்தது.
சித்தார்த்தன் அதை எடுத்தல்
விழுந்த அப்பறவை, மேனி முழுதும்
ஒழுகி ஓடும் உதிரம் புரளத்
துள்ளித் துள்ளித் துடிப்பது கண்டு, (20)
சிந்தை கனிந்து, திருமா மன்னரின்,
செவ்வக் குமாரன் சித்தார்த் தன்போய்,
மலர்ந்து விரியா வாழைக் குருத்தினும்
தண்ணிய கரங்களால் தாங்கி எடுத்து,