பக்கம்:ஆடரங்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடரங்கு

5

வெற்றியில்லாமல் பொதுஜனத்தின் கீழ்த்தரமான அபிருசிகளுடன் போர்தொடுத்து 'ரிடையராகி' விட்ட கலைஞன் மனத்தில்கூட அவ்வளவு கசப்பு ஒருங்கே திரண்டு காணப்படுமா என்பது சந்தேகந்தான். குழந்தைதான் எனினும், வயது அதிகம் ஆகாதவள்தான் எனினும், கலையிலே உள்ள ஒரு தேர்ச்சியினாலும் பழக்கத்தினாலும் அவள் உள்ளமும் உணர்ச்சிகளும் கனிந்து நிறைந்திருந்தன. அவள் வயதுச் சிறுமிகளுக்கும் சாதாரணமாக எட்டாத சிந்தனைகளும் ஆர்வங்களும் உணர்ச்சிகளும் அவளுக்கு எட்டின. அவள் ஊர்வசியையும் சபையில் மற்றவர்களையும் மறந்துவிட்டுப் பாட்டைத் தானும் சொல்லிக் கொண்டு, பாவத்தில் ஈடுபட்டு நாட்டியம் ஆட ஆரம்பித்தாள். தன் நாட்டியம் எப்படியிருக்கும் என்றோ, அதைப்பற்றி மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றோ, இந்த ஒரு பாட்டின் போது அவள் கவலைப்படவேயில்லை. அது முடித்தவுடன் சபையில் ஒரே ஒரு குரல் மட்டும் வெகு உத்ஸாகத்துடன் ' சபாஷ் ' என்றது. யார் அப்படிச் சொன்னவர் என்று லக்ஷ்மி கண்ணைத் திறந்து பார்த்தாள்; இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபன். அவனுக்கு நாட்டியத்தைப்பற்றி ஏதாவது தெரியுமோ, தெரியாதோ; சிறுமிக்கு உத்ஸாக மூட்டவேண்டியது அவசியம் என்று தெரிந்திருந்தது. இதைப்பற்றி லக்ஷ்மி யோசித்து முடிக்குமுன் சபையில் சிலர் கை தட்டினார்கள். வேறு சிலர் லேசாகக் கையைத் தட்ட முயன்றார்கள். அதிகச் சப்தம் செய்யாமல். தன்னையும் அறியாமலே ஸக்ஷ்மியின் கண்கள் ஊர்வசியின் பக்கம் திரும்பின. அவள் முகத்தில் சிறிதும் சலனமில்லாமலே ஓர் உத்ஸாகமும் இல்லாமலே உட்கார்ந்திருந்தாள். அவள் நண்பரும் அப்படியே, மரக்கட்டைபோல, அவள் நாட்டியத்தையும் அவள் உடலையும் அதற்கப்பாலும் ஊடுருவிப் பார்ப்பவர்போல உட்கார்ந்திருந்தார்.

அடுத்த நாட்டியம் ஆரம்பமாயிற்று, அதுவும் சற்றுக் கடினமானதுதான் ; எனினும் லக்ஷ்மி தன் கவனம் முழுவதையும் நாட்டியத்திலே செலுத்தாமல் சபையிலும் செலுத்தி ஆடி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/10&oldid=1528079" இலிருந்து மீள்விக்கப்பட்டது