பக்கம்:ஆடரங்கு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஆடரங்கு

ஊர்வசியையும் விட அவர் நாட்டியக் கலையைப்பற்றி அதிகம் அறிந்தவராயிருப்பாரோ ? அல்லது, ஒரு தீர்மானத்துக்கு வருமுன் அவர் அபிப்பிராயத்தையும் கலந்து அறிந்துகொள்வது நல்லது என்று ஊர்வசி எண்ணினாளோ? தன் நாட்டியம், தன் வயதுக்கு எவ்வளவுதான் உயர்ந்ததானாலும், ஊர்வசிக்கு உயர்ந்ததாகப் படாது என்பது லக்ஷ்மிக்கும் தெரியாத விஷயமல்ல. ' ஏதோ குற்றங் குறைகள் அதிகம் இல்லை, முன்னேற இடமிருக்கிறது ' என்று ஊர்வசி சொல்லிவிட்டால் போதும் என்று எண்ணினாள் லக்ஷ்மி.

அந்தப் பதம் முடிந்துவிட்டது. அடுத்த பதம் கொஞ்சம் கடினமானது. அது நடக்கும்போது லக்ஷ்மியால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. அப்படியும் அவள் வெகு சிரமப்பட்டு ஊர்வசியும், அவளுடன் வந்த நண்பரும் தன் நாட்டியத்தைப்பற்றி என்ன நினைக்கிறர்கள் என்பதை அவர்களுடைய முகபாவத்திலிருந்து அறிந்துகொள்ள முயன்றாள். சபையில் இரண்டொருவர் இடையிடையே, " சபாஷ் ! " என்றார்கள். ஆனால் அவர்களுடைய சபாஷால் மட்டும் லக்ஷ்மி திருப்தி அடைவதாக இல்லை. ஊர்வசியும், மற்றவரும்.... ? ஆனால், நிச்சலனமாயிருந்த அவர் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றிற்று. அந்தப் புன்னகையின் நிழம்போல ஊர்வசியின் முகத்திலும் லேசான ஒரு புன்னகை படர்ந்தது. அது கேலிப் புன்னகைதான்; சந்தேகமில்லை என்று லக்ஷ்மிக்குத் தோன்றிற்று. அவள் லயம் தவறிவிட்டது. அதைக் கவனித்த அவள் தாயும் பாட்டனும் விதவிதமான சைகைகள் காட்டினார்கள்; முகத்தைச் சிணுங்கிக்கொண்டார்கள். லக்ஷ்மி ஏதோ சமாளித்துக்கொண்டு, ஊர்வசியையோ அவள் நண்பரையோ கவனிப்பதில்லை என்ற திடசங்கல்பத்துடன் நாட்டியமாடினாள். ஆனால் அவளையும் அறியாமலே அவள் கண்கள் அந்தப் பக்கந்தான் சென்றன. அவர்கள் இருவர் முகத்திலும் ஏளனப் புன்னகை இன்னமும் படர்ந்திருந்தது.

அதற்கடுத்த நாட்டியம் துவக்கும்போது லக்ஷ்மியின் மனத்தில் ஒரு கசப்புத் தோன்றிவிட்டது. பத்து வருஷங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/9&oldid=1528078" இலிருந்து மீள்விக்கப்பட்டது