தீபம்
119
இதற்குள் அல்லி துயரம் குறையப் பெற்றவளாய், முகத்தைத் துடைத்துக் கொண்டு, ஒரு சிறிது நிதானம் உடையவள் ஆனாள்.
“நிக்கிறீங்களே? உக்காருங்க.”
“ஆமாம்; அது கூடத் தோணலே. நீயும் உக்காந்துக்க.”
இருவரும் அமர்ந்தார்கள். ராஜநாயகம் தொடர்ந்து பேசினார்,
“பெத்தவங்களை, இந்த மாதிரி சமயத்திலே யாராலேயும் நினைக்காமெ இருக்க முடியாது. நினைச்சா, மனசுக்கு ரொம்பக் கஷ்டமாய்த்தான் இருக்கும். நினைக்காமெ இருக்கணும்னு நான் சொல்லவும் இல்லே. ஆனா, நமக்குள்ள விவேகத்தினாலே, வருத்தத்தைக் குறைச்சுக்கணும்னுதான் சொல்றேன். எதனாலே, அப்படிச் சொல்றேன்னா நீ புத்திசாலியா இருக்கறதனாலேதான், உன்னாலே அது முடியுமிங்கிறதனாலேதான். ஒண்ணை நினைச்சுப் பார்; கதி இல்லாமெ, திட்டம் இல்லாமெ, நிர்ப்பந்தம் தாளாமே, தறி கெட்டு ஓடி வந்தே நீ. அப்படிப்பட்ட உனக்குப் புகலிடமா, என்னை இங்கே முன் கூட்டியே நியமிச்சு வச்சிருக்கான் ஆண்டவன். அவனோட கருணைக்கு, இதை விட என்ன அத்தாட்சி வேணும்? நம்மோட நிலைமை இந்த மட்டும் மேன்மையா இருக்கேன்னு, நீ சந்தோஷம் அடையணும். சந்தோஷமாய்த்தான் நீ இருந்துக்கிட்டிருக்கே, இருந்தாலும் ரத்தபாசம் இந்தச் சமயத்திலே...”
திடீரென்று அல்லி மலர் கட்டவிழ்த்து, இதழ் விரித்துச் சிரிப்பைச் சிந்திற்று. அந்தச் சிரிப்பின் கிண்கிணி ஓசை, அந்த அறை முழுவதும் நிறைந்து, காற்றிலே கலந்து மிதந்து வெளியேறிற்று.
“அப்பாடா!” என்று நிம்மதிப் பெருமூச்செறிந்தார் ராஜநாயகம் ‘செவிட்டு மருமகன்’ கதை மாதிரி நாம் எதையோ