16
ஆடும்
“ஏனா? ஊரு சிரிக்குதே உன்னைப் பற்றி. பட்டாமணியம் பாளையப்பத் தேவர் மகன் இன்னாசியோடே நீ சொரணை மறந்து கூத்தடிக்கிறது தெரியாதின்னு பாத்தியா? என் மகளும் கெட்டுச் சீரழியணும்னு பார்க்கிறியா?”
“அண்ணே” என்று அலறிய அல்லி, வெகு நேரம் வரை உள்ளுக்குள்ளேயே விம்மினாள். விம்மல் வெடித்தது: “உங்க மகள் ஒழுங்கா இருக்கணும்னு நீங்க நினைக்கிறது தப்பில்லை. அதற்காக என்னைக் கெட்டவள்னு தூற்ற வேண்டாம். இனி உங்க மகளோட நான் பேசினால், இழுத்து வச்சு என் நாக்கை அறுங்க. அதுக்கு மேலே பேச்சு வேண்டாம் … …!”
அல்லியைப் பொறுத்த வரையில், திடீரென்று காட்டிய பேய் மழை அல்ல இது. சமீப காலமாக, அவ்வூரில் பெய்து கொண்டிருந்த தூற்றல், இப்பொழுது கண்மாய்க்குள்ளும் அழுதது. அவ்வளவுதான்! ஆனால், வெண்டியப்ப அண்ணனை ஊரில் ஒருவராக அவள் நினைத்திருக்கவில்லை. தன்னில் ஒருவராக எண்ணினாள். தனக்காக அனுதாபம் காட்ட ஓர் உள்ளம் இருக்கிறதென்றும் தைரியம் கொண்டிருந்தாள். கையில் தண்ணீரை எடுத்தாலும், அது கைத் தண்ணீராகுமா? கண்மாய்த் தண்ணீர்தானே? வெண்டியப்ப அண்ணனும் ஊராகி விட்டார்.
அவளால் தாங்க முடியவில்லை. ஓர் உள்ளம் ஊராகி விட்டது சகிப்பதற்கில்லை. வேதனை விட்டதா? உயிராகப் பற்றிக் கொண்டிருந்த செந்தாமரையைப் பிரிய வேண்டும். இதையாவது சகிக்க முடியுமா?
சகிக்கக் கூடியதென்று எதையுமே அவள் சந்தித்ததில்லை. ஆனால், அப்பொழுதெல்லாம் தூரை விட்டால் கிளை, கிளையை விட்டால் கொம்பு, கொம்பை விட்டால் தரை