கைவழி நயனம் செல்ல,
கண்வழி மனமும் செல்ல…!
வாத்தியார் ராஜநாயகம் உள்ளே நுழைந்ததும், அல்லியின் நற்குணங்கள் யாவும் அவளிடம் ஓடி வந்து, அடைக்கலம் புகுந்தன. பெற்ற தந்தையை மீண்டும் உயிருடன் பார்ப்பது போல், அவள் மனத்துள் அன்பு கொப்புளித்து எழுந்தது. பரபரப்புடன் எழுந்து, மேலாப்பை போர்த்தியவாறு அவர் எதிரில் வந்து பயபக்தியுடன் நின்றாள்.
ராஜநாயகம் அன்று எழும்பூர் ரெயிலடியில், தான் பாத்த எழிலுருவத்தினை மறுபடியும் ஏற இறங்கப் பார்த்தார். காரில் ஏறிய அல்லி சற்று நடுங்கியவாறு, ஒரு மூலையில் இடம் பிடித்துக் கொண்டு, சென்னை நகரத்துத் தெருக்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டு வந்தாள். வழியெங்கும் பெரிய சினிமா சுவரொட்டி விளம்பரங்கள்! காதளவு நீண்ட தன் கருவிழிகளை இமைக்க மறந்தவாறு, ஏதோ கனவு லோகத்தில் காணப்பட வேண்டியவை தன் முன் பரந்து கிடப்பது போன்ற பிரமையுடன், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டே வந்தாள் அல்லி. வண்டியில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் அல்லியையே பார்த்தவாறு இருந்தனர். அருணாசலம் பார்க்கும் போது, ராஜநாயகம் தணிந்தவாறு பெருமூச்சு விட்டார். ராஜநாயகம் பார்க்கும் பொழுது, அருணாசலத்தின் உள்ளம்