பக்கம்:ஆண்டாள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஆண்டாள்


கொண்டிருக்கும் பிரணவத்தையே குறிக்கின்றது71 (எஸ். கிருஷ்ணவேணி அம்மையார், வில்லிபுத்தூர் விளக்கு ப.3) என்பர். பிரணவத்தில் உருத்தோன்றாது மறைந்துறையும் அகர உகர மகரங்களின் பொருளாகும் மூவரையும் (இறைவன், பிராட்டி, சேதனன்) ஒரே இடத்தில் நிறுத்தி யாவருக்கும் கட்புலனாகுமாறு காட்சி அளிக்கும் பெருமை சிறப்புடையதாகும்.

இன்றும் நாச்சியாரும் பெரியாழ்வாரும் வடபெருங் கோயிலுடையானும் கலந்து வாழும் வில்லிபுத்துார் பொன்னும், முத்தும், மாணிக்கமும் பதித்துச் செய்த அணிக்கு நிகராய் ஒளிர்கின்றது என்று உணர்வோர் உளர்.

குறித்தொருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை
கிறுத்தவூர் விண்டுசித்தர் நீடூர்-பிறப்பிலியூர்
தாழ்வில்லி புத்தூர் என் றைவர்க்குத் தானிரந்தான்
வாழவில்லி புத்தூர் வளம்

என்று பிள்ளைப் பெருமாளையங்கார் கூறும் கூற்று இதை நிலை நிறுத்தும்.72 (நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, ப. 108),

இதுவரை கண்டவற்றால் கோதையார் பெரியாழ்வாரின் வளர்ப்புச் செல்வியார் என்பது உலகம் ஒப்ப முடிந்த ஒன்று என்பது தெளிவாகும். இங்ஙனமிருக்க, ஆண்டாள் பெரியாழ்வாரின் கற்பனைச் செல்வியென்றும், அவரியற்றியதாகக் கூறப்பெறும் திருமொழிகள் பெரியாழ்வாரால் இயற்றப்பட்டதே என்றும் கூறுவோர் சிலர் உளர்73 (பி.ஸ்ரீ. ஆசார்யா பெரியாழ்வார், ப. 94)

காதலின் படுவேகத்தைக் குறிக்கும் பெரியாழ்வார் திருமொழிப் பகுதியே நாச்சியார் திருமொழி என்று வழங்கப் பெற்று நாளடைவில் கோதை நாச்சியார் ஒர் உண்மையான பெண்மணியாகவும், வேறொரு பக்த மணியாகவும் கருதப் பெற்றிருக்க வேண்டும்74 (பி.ஸ்ரீ. ஆசார்யா பெரியாழ்வார், ப. 95)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/52&oldid=958945" இலிருந்து மீள்விக்கப்பட்டது