அடுத்து,
‘மெச்சினனே, உன்னையே --- வில் விஜயனே!’ என்று கிருஷ்ணன் குந்தள வராளியில் பாடவும்,
அதற்கு அடுத்து இந்துஸ்தானி அஸாவேரியில், ‘உன் உயர் அன்பை நான் என்னவென்பேன்?’ என்று சாமண்ணா அமுத கானமாகப் பதிலுக்குப் பாடி முடிக்க, சபையில் எழுந்த பரவச உற்சாகங்கள் கரகோஷங்களாக மாறின.
உணர்ச்சி வசப்பட்ட பாப்பாவுக்குக் கண்ணீர் மல்கியது. அன்று அரக்கனாக வந்த சாமண்ணா அத்தனை பேரையும் கவர்ந்து விட்டான்.
அதுவும் கடைசிக் காட்சியில் கர்ணனைப் பார்த்து, “ஆ! சகோதரா! உன்னைச் சகோதரன் என்று தெரியாமல் கொன்றேனே!” என்று உணர்ச்சி ததும்பக் கூறியபோது சபையே கலங்கி விட்டது.
நாடகம் முடிந்ததும் பாப்பா பூமிக்கு இறங்கி வரச் சற்று நேரம் பிடித்தது. எல்லோரும் சாமண்ணாவின் நடிப்பைப் பாராட்டிப் பேசியபடி வெளியே போய்க் கொண்டிருந்தார்கள்.
பாப்பா வெளியில் வந்து நின்ற போது அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது.
ஃபோர்ட் ஸெடான் கார் பளபளவென்று நிற்க, அதன் அருகில் டாக்டர் ராமமூர்த்தியும் அவர் மகள் சகுந்தலாவும் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
சகுந்தலா நாகரிக யுவதியாகக் கையில் வாட்ச் கட்டி, ஸாரியில் புரூச் குத்தி சொகுசாக நின்று கொண்டிருந்தாள். அவள் விழி சாமண்ணவின் மீது லயித்திருந்தது. அவள் எதிரே சாமண்ண இன்னும் வேஷத்தைக் கலைக்காமல் அர்ச்சுனனாகவே நின்று கொண்டிருந்தான்.
“பிரமாதம் போங்க! உங்களை மறக்கவே முடியாது! அர்ச்சுனன்ன நீங்கதான்! ஷேக்ஸ்பியர் நாடகம் பார்த்தா அப்படி அனுபவம் வரும்னு சொல்வாங்க. இன்னிக்கு உங்க நாடகத்தைப்பார்த்து எனக்கு அந்த, அனுபவம் கிடைத்தது!”
அந்தப் பெண் பரவசமாய்ப் பேசினாள். சிறிது கூட வளையவில்லை. கூசவில்லை. கம்பீரமாக ஓர் ஐரோப்பிய மாது நிற்பது போல நின்று கொண்டிருந்தாள்.
டாக்டர் ராமமூர்த்தியும் சாமண்ணவை வெகுவாகப் புகழ்ந்தார்.
விடைபெறும்போது, “அப்பா அவரை நம் வீட்டுக்குச் சாப்பிட அழையுங்களேன்!” என்றாள் சகுந்தலா.
“ஆமாம் சாமண்ணா! சாப்பாட்டுக்கு வரணும். கம்பவுண்டரை அனுப்பறேன். என்னிக்கு வரேன்னு சொல்லு” என்றார் டாக்டர்.
அர்ச்சுன சாமண்ணா கைகூப்பி நன்றி தெரிவிக்க, அவனது
83