‘நான் கம்பெனிலே வேலை செய்யலை, நாடகத்திலே நடிக்கறேன்’ என்கிறேன்.
ஒரு கணம் திகைச்சுப் போயிட்டா. சங்கடப்பட்டாளா? தெரியலை. தெளிஞ்சு என்னைப் பார்த்தாள்.
‘சாமு, இதை விட்டுடு’ என்றாள்.
‘அம்மா! என்னை மன்னிச்சுடு! எனக்கு வேற எந்தத் தொழிலும் வராது! படிப்பு இல்லை! நடிப்பு எனக்குப் பிடிச்சிருக்கு. நான் பிரமாதமா வருவேன்னு எல்லாரும் சொல்றா’ன்னு சொன்னேன்.
‘நீ சொல்றே. ஒத்துக்கறேன். நீ நன்னா இருப்பே. நிச்சயம் முன்னுக்கு வருவே. ஆனா ஒண்ணே ஒண்ணு! நீ நன்னா வாழணும்னு ஆசைப்படறேன். அதனாலே அம்மா சொல்ற வார்த்தையைத் தட்டாதே. நாடகத்துலே நடி. வேண்டாங்கலை. ஆனா ஒரு நடிகையையோ, ஆடறவாளையோ, பாடறவாளையோ, தேவதாசிகளையோ கல்யாணம் பண்ணிக்காதே. இந்த விஷயத்துலே நான் சொல்றதைச் சத்தியமா எடுத்துக்கோ.’
அம்மாவுக்கு அதுக்கு மேலே பேச்சு வரவில்லை. கண் மூடி விட்டது. ‘அம்மா! அம்மா! இத பாரு. கண்ணைத் திறந்து பாரு. சத்தியம் பண்றேன்’னு கையைப் பிடிச்சேன்.
அம்மா போயாச்சு. நான் சொன்ன வார்த்தை அவள் காதில் விழுந்ததோ இல்லையோ தெரியாது.
இந்தச் சத்தியம்தான் மாமி என் மனசிலே அப்படியே ஆழமாக் கிடக்கு! இதனாலேதான்... இதனாலேதான்...
சாமண்ணா முகத்தைக் கனிந்து கொண்டு கண்ணீர் உகுத்தான்.
கோமளம் அவனைக் கனிவோடு பார்த்தாள். பார்வையில் இரக்கமும் அனுதாபமும் தெரிந்தன.
“இருக்கட்டும் சாமண்ணா! எதுக்கு அழறே? ஏன் விலகி விலகிப் போறேன்னு இப்பத்தான் தெரியறது. உன்னை நான் சங்கடப்படுத்திட்டேன். இல்லை? இதிலே நானும் உன்னைக் குழப்பிட்டேன்னு மனசுலே வச்சுக்காதே. எப்படி எப்படி எல்லாம் நடக்கணுமோ, அப்படித்தான் எதுவும் நடக்கும். பார்க்கலாம். நீ கலங்காமல் போயிட்டு வா” என்று ஆறுதலாகச் சொல்லி அனுப்பினாள்.
அன்றைக்குச் சூரியகுளம் கொட்டகையில் மீண்டும் கோலாகலம்.
‘கர்ணா அர்ச்சுனா’ நாடகம் தனது இணையற்ற இருபத்தைந்தாம் நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தது.
நாலு நாளுக்கு மேல் ஒரு நாடகம் தேருத அந்தக் காலத்தில், கர்ணா அர்ச்சுனா’ அந்த ஊரையும். சுற்றுப்புற கிராமங்
97