பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167


தெம்பு அழிந்தாலும், உடற்கட்டு கட்டுவிடவில்லையானதால், அவள் ஒடியாடி அலுவல் பார்க்க மனம் சளைக்கவே மாட்டாள். அவள் கூட தன் எஜமானி அம்மாளிடம், அம்மா! உங்க புடவைங்களேயெல்லாம் நானே ரைட்டாத் துவைச்சுப் போடுறேனுங்க!” என்று நயம் பயமாகச் சொல்லியுங்கூட, தாரிணிதேவிக்கு அந்த யோசனை கேவலம் பத்து ரூபாய் சம்பளத்துக்கும் மிச்சம் மீதிகளைச் சாப்பிடுவதற்குமே உரிய ஒரு வேலைக்காரியின் தகுதிக் குறைவான ஒரு யோசனையாகவேபட்டது. எனவேதான் அவள் முகத்தில் அடித்த மாதிரியாக, ‘நீ துவைச்சுக் கிழிச்சேடி போ!’ என்று எரிந்து விழுந்தாள்.

வேலாயிக்கு என்ன, வேலை மிச்சம்! அந்த நேரத்தில் சின்ன எஜமான் ராஜாவை "ரோலிங் சேரில்” வைத்து ஆட்டி விளையாட்டுக் காட்டினல் போச்சு! அதே சாக்கில், தன்னுடைய தலைமகளையும் யாரும் பார்க்காத சுபவேளையிலே சுழன்றாடும் நாற்காலியில் குந்தவைத்து, ஆட்டிவிட்டு; சிரிக்கக் செய்து, தானும் சிரித்துப் பூரித்தால் போச்சு! 'வேலாயி, உம்பாடு ஷோக்குத்தான்! பெரிய வீட்டிலே வேலை செய்யிறே என்னேப் பாரேன், ஒரு நாளைக்கு இந்தத் தஞ்சாவூரை ஒம்பதுவாட்டி சுத்துறேன், சுத்தியும் நம்ம பழைய பேப்பர் வியாபாரம் சுரத்துத் தட்டு தான்னா அதான் கிடையாதாக்கும்! ம்...! என்று அவள் கணவன் காத்தமுத்து சமயா சமயங்களில் மனம் காய்வதும் மெய்தான்.

எனக்கென்னுங்கிறேன் கவலை மச்சான்! எங்க பெரிய எசமானருக்கு லேவாதேவி வியாபாரம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கிலே பணம் புரளும். ஒருநாளைக்கு எம்புட்டு வெள்ளைக் கடுதாசி எழுதிஎழுதி முத்திரைத் தலை ஒட்டி கையெழுத்து எல்லாம் வாங்குறாரு எங்க கணக்குப்