பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

69



பிள்ளையின் இலக்கணம் பெற்றோரைக் காப்பாற்றுதலும், உலகிற்குத் தொண்டு செய்தலும் ஆகும் என்று ஒருவர் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அவ்விரண்டுந்தானே பிள்ளையினால் உண்டாகும் பயனுங்கூட? எனவே, ஒன்றையே இலக்கணமாகவும், பயனாகவும் திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதைக் குறித்துத் தியங்கவேண்டாவன்றோ?

(மண - உரை) இல்வாழ்க்கையாகிய நிலை யாவர் மாட்டும் அன்பு செய்தலையும், அறம் செய்தலையும் உடைத்தாயின் அதற்குக் குணமாவதும் பயனாவதும் அவ்விரண்டினையும் உடைமைதானே.

(பரி-உரை) ஒருவன் இல்வாழ்க்கை, தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தினையும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆம். இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடை போகாமையின் (நடவாமையின்) அன்புடைமை பண்பாயிற்று; அறனுடைமை பயனாயிற்று.

(ஆராய்ச்சி உரை) அன்பு என்பதற்கு மனைவிமேல் உள்ள அன்பு என்று பகர்ந்துள்ளார் பரிமேலழகர். இங்கே வள்ளுவர் காதல் என்னும் சொல்லை வைத்திருந்தாலும் பரிமேலழகர் பகரலாம்; அவ்விதம் இல்லையே! ஆகவே, அன்பு என்பதற்கு யாவரிடத்தும் உள்ள அன்பு என்று பொருள் கூறினால், அவ்வில்வாழ்வானுக்கும் பெருமை - திருவள்ளுவர்க்கும் பெருமை! எல்லோரிடத்திலும் அன்பு உள்ளவன் தன் மனைவியிடத்திலா அன்பு இல்லாதவனாகப் போய்விடுவான்? பரிமேலழகர் கூறியபடியே வைத்துக் கொண்டாலும், தம் மனைவியின்மேல் அளவு மீறி அன்பு கொண்ட சிலர், பிறரை நோகச் செய்கின்றனரே! பிறரை