ஆணிமுத்துகள்
69
பிள்ளையின் இலக்கணம் பெற்றோரைக் காப்பாற்றுதலும், உலகிற்குத் தொண்டு செய்தலும் ஆகும் என்று ஒருவர் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அவ்விரண்டுந்தானே பிள்ளையினால் உண்டாகும் பயனுங்கூட? எனவே, ஒன்றையே இலக்கணமாகவும், பயனாகவும் திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதைக் குறித்துத் தியங்கவேண்டாவன்றோ?
(மண - உரை) இல்வாழ்க்கையாகிய நிலை யாவர் மாட்டும் அன்பு செய்தலையும், அறம் செய்தலையும் உடைத்தாயின் அதற்குக் குணமாவதும் பயனாவதும் அவ்விரண்டினையும் உடைமைதானே.
(பரி-உரை) ஒருவன் இல்வாழ்க்கை, தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தினையும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆம். இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடை போகாமையின் (நடவாமையின்) அன்புடைமை பண்பாயிற்று; அறனுடைமை பயனாயிற்று.
(ஆராய்ச்சி உரை) அன்பு என்பதற்கு மனைவிமேல் உள்ள அன்பு என்று பகர்ந்துள்ளார் பரிமேலழகர். இங்கே வள்ளுவர் காதல் என்னும் சொல்லை வைத்திருந்தாலும் பரிமேலழகர் பகரலாம்; அவ்விதம் இல்லையே! ஆகவே, அன்பு என்பதற்கு யாவரிடத்தும் உள்ள அன்பு என்று பொருள் கூறினால், அவ்வில்வாழ்வானுக்கும் பெருமை - திருவள்ளுவர்க்கும் பெருமை! எல்லோரிடத்திலும் அன்பு உள்ளவன் தன் மனைவியிடத்திலா அன்பு இல்லாதவனாகப் போய்விடுவான்? பரிமேலழகர் கூறியபடியே வைத்துக் கொண்டாலும், தம் மனைவியின்மேல் அளவு மீறி அன்பு கொண்ட சிலர், பிறரை நோகச் செய்கின்றனரே! பிறரை