இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர் பகுதி
25
மழை
மழையே மழையே வா வா!—நல்ல
வானப்புனலே வா வா!—இவ்
வையத்தமுதே வாவா!
தழையா வாழ்வும் தழைக்கவும்—மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும்
மழையே...
தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன
மழையே...
ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி
மழையே...
இல்லாருக்கும், செல்வர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயேயன்றோ?
மழையே...