— 17 —
இராசீவுக்குப் பாடிய அறப்பாடல்!
அத்தகைய வெகுண்ட சூழலில் ‘தென்மொழி'யின், 88 மார்ச்சு, ஏப்ரல், சுவடி 24, ஓலை 3 — இதழில், அவர்மேல் ஓர் அறப்பா (சாவப்பாடல்) எழுதினோம். அப்பாடலைப் பலரும் மறந்திருக்கலாம். சிலர் நினைவில் வைத்திருக்கலாம். ‘இட்ட சாவம் முட்டுக' என்னும் தலைப்பில் எழுதிய 36 வரிகள் கொண்ட பாடல் அது. இதழ்களைக் காத்து வைத்துள்ளவர்கள் அக்குறிப்பிட்ட இதழை எடுத்து இப்பொழுது பார்க்கக் கேட்டுக் கொள்கிறோம்.
அப்பாடல், 'முண்டையின் மகனே! முண்டையின் மகனே!' என்று தொடங்கி,
சிங்களக் கொலைஞன் செயவர்த் தனன்எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித் திடவே
முந்து‘இரா சீவ்'— எனும் முண்டையின் மகனே!
.................................................
யாழ்த்தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!
— என்று நடந்து,
நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் வுலகத்து இருக்குநாள் தோறும்
எந்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதலால்
வெந்தழி யும்நாள் விரைந்துனக் கெய்துக!
— என்று பொங்கிப் புடைத்தெழுந்து,
இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக ! நின்னுடல் வெடித்துச்