பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

சிற்பக் கலை உலகில் நாம் யாருக்குமே தாழ்ந்தவரில்லை என்று தலை தூக்கி நிற்கிற தமிழன் அதே பெருமையோடு சித்திர உலகில் மார்தட்டிக் கொள்ள முடியாது. சித்திரக் கலை மேல்நாட்டில் வளர்ந்த அளவிற்குத் தமிழ்நாட்டில், வளர்ந்து இருக்கிறது என்று கூற இயலாது. லியார்னாடோவின்சி, ரபேல், டிஷியன், ரூபன், ரெம்பிராண்ட் முதலிய பண்டைச் சித்ரீகர்களுக்கு உலகில் என்றும் அழியாத பெருமை உண்டு. நமது இந்திய நாட்டிலோ, அழியா அழகு நிரம்பிய அஜந்தா ஓவியங்கள் உண்டு. இவையுடன் போட்டி போடத் தமிழன் என்றுமே முனைந்ததில்லை என்றாலும் ‘நானும் சளைத்தவனில்லை’ என்று வீம்பு பேசிக் கொண்டு இந்தச் சித்திர உலகத்திலும் முன் நடந்திருக்கிறான் அவன். இங்கும் சித்திரம் தீட்ட இவர்கள் தேடிய இடம் கோயில் பிரகாரத்தில் உள்ள சுவர்கள்தான். பண்டைய இலக்கியமான பத்துப்பாட்டு, புறநானூறு, சீவக சிந்தாமணி முதலிய நூல்களிலிருந்து சித்திர மாடங்கள், சித்திரக் கூடங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அன்றே இருந்தன என்று அறிகிறோம். என்றாலும் இந்தச் சித்திர உலகில் பழம் பெருமையுடையது புதுக்கோட்டையை அடுத்த சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலில் உள்ள ஓவியங்களே. இவற்றை ஜைனனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சைவனாக மாறுவதற்கு முன் எழுத ஏற்பாடு பண்ணியிருக்க வேண்டும், ‘சாமவ சரவணப் பொய்கை’ என்று ஜைனர்கள் புகழும் தடாகத்தை அங்குள்ள விதானத்தில் வரைந்து

76