4
இந்தியா எங்கே?
பாமர மக்கள் முதல் பாராளும் அதிகாரி - அமைச்சர் வரை தங்கள் மனதில் உள்ள கருத்தை வெளியில் சொல்லாமல் கோழையாக அஞ்சி நடுங்கி இருந்த ஆபத்தால்தானே, அசிங்கமானதொரு நிலை நாட்டில் ஏற்பட்டது. மறுபடியும் ஒருமுறை அத்தகைய அரசியல் அசிங்கம் நேராதிருக்க வேண்டு மானால், மக்கள் - படித்தவர் - நிர்வாகிகள் - அரசியல்வாதிகள் - பதவிக்காரர்கள் அனைவரும், ஆண்மையுடன் தர்ம நியாயத்தை உடையவர்களாக இருந்தால்தான் முடியும்.
தர்மத்தை மறந்தவன் ஒரு புழு. நத்தைக்குக் கூடப் பயப்படும் கோழையாகத்தான் இருக்க முடியும். அப்படி பயந்து நடுங்கும் அரசியல் பொம்மை களுக்கு இனி பொது வாழ்வில் வேலையில்லாமல் செய்யும் துணிச்சலை நாம் பெறவேண்டும்.
இந்த ஆண்டு 23.01.1978 அன்று. நமது ஜனாதிபதி அவர்கள் நேதாஜி அவர்களது படத்திறப்பின்போது பேசிய வீர கர்ஜனையும், அடுத்து விடுத்த குடியரசு தினச் செய்தியும், விடுதலையின் ஆத்மத் துடிப்பை நம் இதயமெங்கும் கலந்து உறவாடச் செய்தன. என்றாலும்.
உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பது. இந்தியா என்ற பெருமையைப் பறைசாற்றிக் கொள்வதில் நாம் தவறுவதில்லை.
ஆனால், அந்த ஜனநாயகத்தின் அடிவேர்களான, இந்நாட்டு ஏழை மக்களுக்கும் நாம் பறைசாற்றிக் கொள்ளும் ஜனநாயகத் திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தால், நம் மனோசாட்சி நம்மைப் பார்த்து கெக்கலி கொட்டிக் கேலி செய்து பலமாகச் சிரிக்கிறது!
அந்தச் சிரிப்பின் அதிர்ச்சியில், நமது நாட்டின் விடுதலை சக்தி வெடவெடத்து நடுங்குகிறது. ஆனால், இந்த மனோசாட்சி விடுதலை - தியாகம் இவைகளைப் பற்றியெல்லாம், அரசியல் வியாபாரிகளுக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை - இந்தக் கவலைகளை யெல்லாம் பட்டுக்கொண்டிருந்தால் அரசியல் வாதியாக இருக்கவும் முடியாது!