பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

117


இத்தகைய ஒரு முடிவை அவர் எப்படிக் காண முடிந்தது? அவர்தம் வாழ்வையே சோதனையாக்கியவர். அந்தச் சோதனையில் தம் மனைவி கஸ்தூரிபாவையும், தம் மக்களையும் கூட உட்படுத்தினார் எனலாம். தந்தைநாயகச் சமுதாயத்தில் குடும்பத் தலைவன் நாயகன்; அரசன். மனைவியும் குழந்தைகளும் அவன் ஆணையில் இயங்கும் பிரஜைகள்... அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை பற்றிய முடிவுகளை எடுக்கத் தாய்க்கும் உரிமை இல்லை என்பதே உண்மை.

இனி, அன்னை கஸ்தூரிபாவின் வாழ்க்கையைச் சற்று கூர்ந்து, எந்தவிதமான சார்தலும் இன்றிப் பார்க்கலாம். கஸ்தூரிபாவைப் பற்றிய செய்திகள் அனைத்தும் காந்தியடிகளின் மொழிகளிலேயே நமக்குத் தெரிகின்றன. எனவே இந்த உண்மைகள் நிச்சயமாக உண்மைகளே; திரிபுகள் இல்லை.

பதின்மூன்று வயதான மோகன்தாஸ் காந்திக்கு, அதே வயதுடைய கஸ்தூரிபாயைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்தார்கள். போர்பந்தரில் செல்வந்தரான வணிகர், கோகுல்தாஸ்மகன்ஜி, கஸ்தூரியின் தந்தையாவார். மோகனுக்கு நிச்சயம் செய்த முதல் இரண்டு பெண்களும், திருமணம் என்று பேசுமுன்பு இறந்துவிட்டார்கள். கஸ்தூரி மூன்றாவதாக நிச்சயம் செய்யப்பட்டவள். ஒரே தெருவில் சிறு குழந்தையாக இருந்த நாட்களிலேயே இருவரும் விளையாட்டுத் தோழர்களாக இருந்திருக்கிறார்கள். மோகனின் தாய், அடிக்கடி தன் மருமகளாக வரப்போகும் கஸ்தூரியின் வீட்டுக்கு அவனையும் அழைத்துச் சென்றிருக்கிறாள்.

திருமணம் என்று நிச்சயம் செய்த போது மோகன், அந்த வயதில் படிக்கின்ற நேரத்தில் திருமணம் வேண்டாம் என்று தந்தையிடம் தெரிவித்ததுண்டு.