ஒளி
71
மாலதி: எவ்வளவு நேரம் உங்களுக்காகக் காத்திருப்பது? காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்தே விட்டன.
மாத: அதனால்தான் கண்ணீரா?
மால: பின்னே, எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தால், அழுகை வராதா?
மாத : ஓகோ, அப்படியா சேதி! என் மீதுகூட உனக்கு அவ்வளவு அன்பு இருக்கிறதா?
மாலதி: காரியமாகிறவரைக்கும் கண்ணே, மணியே என்பது; அப்புறம் கண்ணீர் வரும்படி நடந்து கொள்வது! ஆண்களுக்கு இது ஒரு விளையாட்டாகவே போய்விட்டது!
மாத: தொடங்கிவிட்டாயே கண்ணே, தூற்றலை!
மாலதி: பின்னென்னவாம்! உங்களிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன்? ஒட்டியாணம், வேண்டுமென்றேன்; கிட்டாது அது என்று கூறிவிட்டீர்கள்! பேசரி என்றேன், பே பே என்றீர்கள். முத்துப் பிலாக்கு என்றேன், மூக்கு கெட்டுப்போகும் என்றீர்கள். மொகரா என்றேன்; முகமே போதும் என்றெல்லாம் தட்டிக் கழித்து விட்டீர்கள். உங்களைக் காதலித்துக் கண்ட பலன் என்ன? பூச்சிப் புழுவுக்குக் கூட லாபமில்லை.
மாத: என்ன இப்படிச் சொல்லிவிட்டாய் மாலதி! அறிவானந்தரின் ஆராய்ச்சி முடியட்டும்! எனக்கு ஆயிரம் பொன் தருவதாகக் கூறிவிட்டார்! மணிவண்ணன் கொடுத்து வைத்தவன்! அவர் மகளையே கொடுக்கப் போகிறார் அவனுக்கு. எனக்கு? இனிமேல் நீதானே எல்லாம் சுற்றிச் சுற்றி வந்தாலும், உன்னையும், உன் இடுப்பையும்தானே சுற்றியாக வேண்டும்!
மால: பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்லை.
மாத: அதெல்லாம் போகட்டும்; இப்போது என்ன வேண்டும்? என்ன நகை உனக்குக் குறைவாயிருக்கிறது?