பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

சுந்தர சண்முகனார்



தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராகிய பேராசிரியர் என்பவர், “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல்” என மெய்ப்பாடு என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர். இவரும் இவர் போன்ற சிலரும், ‘மெய்’ என்பதற்கு உடம்பு எனப் பொருள் கொள்ளாமல், உள்ளத்தில் நிகழும் உண்மை-மெய்ம்மை நிகழ்ச்சி என்ற மாதிரியில் பொருள் கொண்டுள்ளனர்.

மெய் என்பதற்கு உடம்பு எனப் பொருள் கோடலே பொருத்தமானது. ஒருவரால் உள்ளத்தில் உணரப்பட்ட நிகழ்ச்சி மெய்யில் அதாவது வெளி உடம்பில் வெளிப்பட்டுத் தெரிவதே மெய்ப்பாடு எனப் பொருள் கோடலே அமைவுடையதாகும்.

மெய் மயக்கம்

இலக்கணத்தில் மெய்யெழுத்துகளின் மயக்கம் பற்றி கூறுவது மெய்ம் மயக்கம் எனப்படும். இங்கே மயக்கம் என்பது கலத்தல் - கூடுதல் என்னும் பொருளது. இது இங்ஙனமாக, சிலர் மெய் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுவதில் மயக்கம் அடைந்துள்ளனர். மெய் என்றதும், அவர்கட்கு உண்மை என்னும் பொருள் வருகிறதே தவிர, உடம்பு என்னும் பொருள் வருவதில்லை.

உடம்பு மெய்யானது இல்லையாம் - பொய்யானதாம் - அழியக் கூடியதாம். விளக்கை அவித்தலை விளக்கைப் பெரிதாக்குதல் என்று கூறும் மங்கல வழக்குப்போல, பொய்யான உடம்பை மெய் என்று கூறுதல் ஒரு வகை மங்கல வழக்கு என்பர் சிலர்.

மற்றொரு சாரார் பின்வருமாறு கூறுகின்றனர்:- இந்த உடம்பு பொய்யானதாம். ஆனால், மெய்யான இறைவன்