பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியரும் இராமனும் ே 203 அறிவையோ, எதிரியை எடைபோடும் நுணுக்கத்தையோ குறைத்து மதிப்பிட முடியாது. ஒருமுறைபெற்ற பட்டறிவால் இலக்குவன் முன்எச்சரிக்கையுடன் இருந்ததில் தவறு ஒன்று மில்லை. அனுமன் குரங்கு வடிவெடுத்ததில் இலக்குவன் சந்தேகம் வலுத்திருக்கக்கூடும். அரை மனத்துடன்தான் சுக்கிரீவனைக் காண இராமனுடன் செல்கிறான். அங்கு நடைபெற்ற உரையாடல் சுக்கிரீவன்மேல் அன்பைச் செலுத்த முடியாமல் செய்துவிட்டது. பரம்பொருளின் அவதாரம் என்று தான் வழிபடும் தன்னுடைய அண்ணன் குரங்கு வடிவுடன் இருக்கும் சுக்கிரீவனிடம் சென்று, உரையாடத் தொடங்கின வுடன் "உன்னிடம் வருமாறு சவரிதான் உன் இருப்பிடத்தைக் கூறி இங்கு அனுப்பினாள். சுக்கிரீவா! நான் வந்த காரணத்தைச் சொல்லுகிறேன்” என்ற கருத்தில், “கை அறுதுயரம், நின்னால் கடப்பது கருதி வந்தேம்” (3809) என்று கூறினான். வந்த விருந்தினனாகிய இராகவன் இவ்வாறு கூறவும், "உனக்கு என்ன துயரம் நேர்ந்தது? என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றல்லவா விடையிறுத்திருக்க வேண்டும்? ஆனால், இராமனுடைய இந்த வேண்டுகோளைக் காதில்கூட வாங்கிக்கொள்ளாமல் அந்தச் சுக்கிரீவன், இந்த வேண்டுகோள் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் தான் தன் அண்ணனிடம் பட்ட அடி உதைகளையும், தன் வரலாற்றை யும் ஒரு முழுப் பாடலில் கூறி முடிக்கிறான். இவனால் ஏதோ பெரிய உதவி கிடைக்கும் என்று நம்பிவந்த இராம - இலக்குவருக்கு சுக்கிரீவன் விடை இரண்டு விதமாகப் பட்டிருக்க வேண்டும். தன் துயரத்தைவிட அவன் துயரம் பெரிதென்று நினைத்த இராகவன் அவனிடம் மனங்கசிந்து பேச ஆரம்பித்தான். இளையவன் என்ன நினைந்தான் என்று கவிஞன் கூறவில்லை; என்றாலும் சுக்கிரீவனிடம் அவன் நடந்துகொண்ட விதத்தைப் பற்றிக் கண்ணால் பார்த்த பிறகு இலக்குவனுக்கு எப்படி அவன்மேல் மதிப்பு ஏற்பட்டிருக்க முடியும்?