24 38 இராமன் - பன்முக நோக்கில் இப்பாடலின் முதலடி பிரளயகாலத்தில் உலகைத் தன்னுள் அடக்கிக் கொண்டு ஆலிலைமேல் மிதந்த திருமாலையே குறிக்கின்றது; பரம்பொருள் வேதத்தால் அறியப்படாததாய் அதற்கப்பால் நின்றவன் என்பதை இரண்டாம் அடி குறிக்கின்றது; மூன்றாவது அடி, இராமபிரானின் வடிவழகைக் குறிக்கின்றது; நான்காம் அடி கோசலை அத் திருக்குமாரனைப் பயந்தாள் என்பதைப் பேசுகிறது. அடுத்து வரும் பாடலில் பரதன் பிறந்த நிகழ்ச்சி பேசப்படுகிறது: ஆசையும், விசும்பும், நின்று அமரர் ஆர்த்து எழ, வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற, பூசமும் மீனமும் பொலிய, நல்கினாள், மாக அறு கேகயன் மாது மைந்தனை. - கம்பன் 283 இப்பாடலின் முதலிரண்டு அடிகள் தேவர்களும், நான்முகனும் வணங்கி வாழ்த்த, மூன்றாவது அடியில் கோள்கள் நின்ற நிலையும், நான்காவது அடியில் கைகேயி பரதனைப் பெற்ற சிறப்பும் பேசப் பெறுகின்றன. அடுத்த இரண்டு பாடல்களில் முறையே இலக்குவனும், சத்துருக்கனும் சுமித்திரை வயிற்றில் அடுத்தடுத்துப் பிறந்ததாகப் பேசப்படுகிறது. இவர்கள் பிறந்த நட்சத்திரம் முதலானவற்றைக் கம்பன் வான்மீகியின் சருக்கம் 18 : 9, 11, 12, 13 ஆகிய பாடல்களில் இருந்து எடுத்துக் கொண்டான் என்றாலும், பதின்மூன்றாவது சுலோகத்தின் கருத்துக்கு மாறுபட்டு இலக்குவ, சத்துருக்கனர் இருவரும் ஆயில்யத்தில் ஒன்றாகவே பிறந்தனர் என்ற கருத்துக்கு முரண்பட்டு, ஆயில்யத்தில் இலக்குவனும், மக நட்சத்திரத்தில் சத்ருக்கனனும் பிறந்தார்கள் என்று திருஅவதாரப் படலத்தில் (284, 285) கம்பன் பேசுகிறான். இதனை இவ்வளவு விரித்துக் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. வான்மீகியைப் பின்பற்றிக் கம்பன் பாடினாலும்,