பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் 'கொல்லப் படுதல்பற்றி வரத்தில் ஒன்றுமில்லை; வெல்லப்படக்கூடாது என்பதே வரம்' என்றும் கூறினான். இராவணன் பிறரிடஞ் சரணடைந்து வெல்லப்படவில்லை. தான் எடுத்த காரியம் சரியோ, தவறோ, அதற்காக உயிரை விட்டதால், கொள்கையில் வெற்றியே கொண்டானாதலின் 'வெல்லப்படாய்' எனக் கொடுத்த வரமும் உண்மையாயிற்று. அவன் கொண்ட வெற்றிகளெல்லாம் வரத்தான் விளைந்தவையல்ல; அவன் புய பலத்தால் விளைந்தவையே என்பான்: 'உலகனைத்தும் செருக்கடந்த புய வலி' என்று கூறினான். இவ்வளவு அருமைப்பாடுகளும் அமைந்த இராவணன் ஊழ் வலியால் ஒரு பெருந்தவறு செய்தான் பிறன் மனை நயத்தலாகிய சிறு தொழில் செய்தான். அதன் பயனாக மானம் இழந்து, அரியணை இழந்து, உயிரும் இழந்தான்; தன்னோடு சேர்ந்தாரை இறக்குமாறு செய்தான்; ஒரு பெரிய அவல நாடகம் நடக்குமாறு செய்துவிட்டான் பெருந் தவறு செய்த காரணத்தால் பெருந் தீங்கை அடைந்தான். இவ்வொரு தவற்றிற்காக அவனை வீணன் என்று தள்ளலாகாது. படிப்பவர் மனத்தில் அவன் பால் மட்டற்ற மதிப்பே தோன்றுகிறது. நன்மைக்கும் தீமைக்கும் ஒரு பெரும் போராட்டம் நடந்தது. அவன் பால் முழுதுமே தீமை இல்லை. முழுதும் நன்மையா யிருந்த இராவணன் மனத்தில் சிறு தீமை புகுந்து அம்முழு நன்மையையும் தனக்கு அடிமைப் படுத்தி விட்டது, பண்பாடுகளால் நிரம்பிய அப்பெருமனம் சிறிது சிறிதாகப் பிடி இழந்து, இறுதியில் பெருங் குழியில் விழுகிறது. இதுவே அவலத்தின் சிகரம். இந்நிலையைச் சிறிது விரிவாகக் காண்பதே நூலின் நோக்கமாகும்.