பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5.பாதிரியாரின் ஆன்மா

ண்டைக் காலத்தில் அயர்லாந்திலே பல பெரிய கல்விச் சாலைகள் திகழ்ந்து வந்தன. அவைகளிலே கலைகள் பலவும் மக்களுக்குக் கற்பிக்கப்பெற்று வந்தன. அந்தக் காலத்தில் ஏழை மக்கள் பெற்றிருந்த கல்வியின் அளவு இக்காலத்துப் பிரபுக்களுடைய கல்வியைப்பார்க்கினும் அதிகமென்று சொல்லலாம். பாதிரிமார்களின் படிப்போ எல்லாவற்றிலும் மேற்போனது. ஆதலால், உலகெங்கும் அயர்லாந்தின் புகழ் பரவி, வெளிநாட்டு அரசர்கள் பலர் தங்கள் குமாரர்களை அயர்லாந்துக்கு அனுப்பி, அங்குள்ள பள்ளிகளில் பயின்று வரும்படி செய்தனர்.

ஒரு சமயம் ஏழைச் சிறுவன் ஒருவன் ஒரு பள்ளியில் படித்து வந்தான். அவனுடைய புத்திக்கூர்மையைக் கண்டு எல்லோரும் வியந்தனர். அவனுடைய பெற்றோர்கள் உழைப்பாளிகள், ஏழைகள். ஆயினும், பணக்காரர்களுடைய பிள்ளைகள், அரச குமாரர்கள் எவரும் கல்வியில் அவனை எட்டிப் பிடிக்க முடியவில்லை. அவனுக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர்கள் கூட அவனிடம் எச்சரிக்கையாக இருக்க நேர்ந்தது; அவர்கள் அவனுக்கு எதையாவது கற்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் அவர்களே கேட்டிராத அரிய பெரிய விஷயம் ஒன்றைச் சொல்லுவான். வகுப்பிலே அவர்கள் வெட்கமடையும்படி நேரிடும். அவனுடைய வெற்றி முறைகளுள் ஒன்று, விவாதம். அவனிடம் யார் தருக்கம் செய்தாலும் அவன்தான் வெற்றியடைவான். கறுப்பை வெள்ளையென்று நிரூபிக்கும்வரை அவன் விவாதத்தை விடமாட்டான். சரி, வெள்ளைதான் " என்று ஒருவர் ஒப்புக்கொண்டாலும், அவன் தன் வாதத்தை மாற்றி, வெள்ளையில்லை கறுப்புத்தான் என்று நிலைநாட்டுவான் அல்லது உலகில் வர்ணங்களே இல்லை என்று காட்டுவான்.

அவன் பெரியவனாக வளர்ந்ததும், அவனுடைய பெற்றோர்கள் அவனைப்பற்றி மிகவும் பெருமை கொண்டு, அவனைப் பாதிரியாராகத் தகுதி பெறும்படி சமயக் கல்லூரி