சூத்திரம்-௧
இறையனார் அகப்பொருள்
5
இனி, நுதலிய பொருள் என்பது - நூற்பொருளைச் சொல்லுதல் என்பது. இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலிற்று என்பது.
கேட்போர் என்பது - இன்னார் கேட்டார் என்பது. இந் நூல்கேட்டார் யாரோ எனின், குற்றமுடைய நூலாயினன்றே குற்றமின்மை ஆராயவேண்டுவது; இது முனைவன் தன்னாற் செய்யப்பட்ட நூலாகலான் [1]குற்றமின்றே; [2]இன்மையிற் கேட்டாரையும் இன்றென்பது. இன்றேயெனினும், உரை நடந்து வாராநின்றமை நோக்கிக் கேட்டாரையும் உடைத்தென்பது. யாரோ கேட்டார் எனின், மதுரை உப்பூரிகுடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பது. அவன் கேட்டற்குக் காரணஞ் சொல்லுதும் :
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர்..
அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், [3]முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத் தொடக்கத்தார் ஐஞ்னூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன (எத்துணையோ) பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு சங்கம் இருந்தார் என்பது. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்ப.
இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப் பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறு பாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், [4]குருகும், வெண்டாளியும், [5]வியாழமாலை அகவலும்