xxix
(1) நச்சினார்க்கினியர்
'ந' என்பது சிறப்புப் பொருள் உணர்த்துவதோர் இடைச்சொல்; அது பின்னை, சென்னை, பாலத்தன், கீரன் முதலிய பெயர்களுடன் சேர்ந்து முறையே நப்பின்னை நச்செள்ளை நப்பாலத்தன் நக்கீரன் என்று ஆகும் என்ற கருத்தைச் சீவக சிந்தாமணிப் பாடல் ஒன்றின் (482) உரை விளக்கத்தில் கூறியுள்ளார்.
(2) டாக்டர். உ. வே. சா.
நத்தத்தனார் என்னும் சங்கப் புலவரின் பெயரை ஆராய்ந்த டாக்டர் உ.வே. சா. பின் வருமாறு கூறியுள்ளார்.
“தத்தனார் என்பது இவரது இயற்பெயர் என்றும், கல்வி மேம்பாடு பற்றி நத்தத்தனார் என்ற பெயர் இவருக்குப் பிற்காலத்தில் வழங்கலாயிற்று என்றும் தோற்றுகிறது. ‘ந’ என்பது சிறப்புப் பொருளைத் தருவதோர் இடைச்சொல், நக்கீரர் நப்பாலத்தர் நப்பூதனார் நச்செள்ளையார் முதலிய பெயர்களாலும் இது விளங்கும் (பத்துப் பாட்டு உரை—பாடினோர் வரலாறு —பக். 32).
(3) வேறு சில சான்றுகள்
நப்பசலையார் நக்கண்ணையார் ஆகிய பெயர்களிலும் ‘ந’ என்பது சிறப்பை உணர்த்தும் இடைச்சொல்லாக வந்துள்ளது.
ஆதலின், ந+தத்தன்+ஆர் ஆகிய சொற்கள் சேர்ந்து நத்தத்தனார் ஆகியுள்ளன என்று கொள்வதே பொருத்தமாக உள்ளது.
2. ஐயனாரிதனார்
ஐயனாரிதனார் என்னும் பெயரை, இந்த நூலின் ஆசிரியர், ஐயனார் + இதனார் என்று பிரித்து. ஐயனார்க்கு இனியன் என்று பொருள் கொண்டுள்ளார் (பக். 203).
இதற்கு மாறான கருத்து அறிஞர்களிடம் நிலவி வருகின்றது.