பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 45



கொண்டிருந்த உலகம், இன்று ஒன்று கூடி உள்ளம் கலந்து, அன்பு காட்டி வாழும் மக்களைப் பெற்றுக் காட்சியளிக்கிறது; அந்நல் வாழ்வு மேலும் மேலும் வளர்தல் வேண்டும்; உலக மக்கள் இறவா இன்ப நெறி பற்றி வாழ்தல் வேண்டும் என எண்ணிய பெரியார் களுள் நம் பெருவழுதியும் ஒருவன். பெருவழுதி அவ்வாறு எண்ணியதோடு நில்லாது, உலகின் நிலை இது அவ்வுலகிற்கும் பெரியார்க்கும் உள்ள தொடர்பு இது அப்பெரியாரின் இயல்பு இது எனக் கூறுவான் போல், எல்லாரும் பெருமை உடையவராகுங்கள், பெருமை உடையவராகி உலகியல் வாழ உறுதுணை புரியுங்கள் என உலக மக்கட்கு ஒர் அரிய அறவுரை அளித்துள்ளான்.

உலகம் தோன்றிய நாள் முதலாக, இன்று வரை அவ்வுலகில் பிறந்து வாழ்ந்து இறந்த உயிர்களை எண்ணிக் காணல் எவர்க்கும் இயலாது. எத்தனையோ உயிர்கள் தோன்றின; எத்தனையோ உயிர்கள் மறைந்தன. பிறந்து இறந்த மக்கள் எத்துணையரோ! இவ்வாறு, பலகோடி உயிர்கள், பலகாலும் பிறந்து பிறந்து அழியவும், அவ்வுயிர்கள் பிறந்து இறத்தற்கு நிலைக்களமாய இவ்வுலகியல் மட்டும் மறையாது தொன்று தொட்டே வாழ்ந்து வருகிறது. உயிர்கள் அழிய, உலகியல் அழியாது இருப்பது எவ்வாறு? அதை அழியாவண்ணம் நின்று காப்பார் யாவர்? அதன் அழியாமைக்குக் காரணமாயது எது?

“நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு, எல்லார்க்கும் பெய்யும் மழை,” என்ப. உலகியல்