பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

சமணரும் புத்தரும் தமிழிலக்கியம் பல ஆக்கினும், அவற்றில் அவர்தம் சமயக் கொள்கைகளே மிகுதியாக, இலக்கிய நயம் குறைவாக அமைத்திருத்தல் கண்ட மக்கள், அவர் நோக்கமெல்லாம் சமய வளர்ச்சியிலேயே உளது; இலக்கிய வளர்ச்சியில் இல்லை என்று எண்ணலாயினர்; அதனால் அவர் பழிக்கப் பெற்றனர். அது கண்ட அவர்கள், நவில்தொறும் நயம் பயக்கும் நல்ல இலக்கிய வளர்ச்சியில் நாட்டம் செலுத்தினர். சிறந்த இலக்கியங்களை ஆக்க எண்ணிய அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த கண்ணகி மணிமேகலை வரலாறுகளேக் கூறியதால் தம் சமயத்திற்குப் பெரும் பயன் விளையாமைகண்டு, தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் விரும்பும் வடநாட்டுக் கதைகளை அடிப்படையாகக் கொள்ளலாயினர். பெருங்கதை, சிந்தாமணி, வளையாபதி போலும் காப்பியங்கள் அவ்வாறு தோன்றிய பேரிலக்கியங்களாம்; தமிழரால் நன்கு மதிக்கப் பெறுதலே வேண்டிய அவர்கள், தாம் இயற்றிய அவ்விலக்கியங்களில், தம் சமயக் கொள்கைகளை விரியக் கூறாமையோடு, தமிழரின் வழிபடுகடவுளராய் விளங்கிய சிவன், திருமால், முருகன், பலதேவன் முதலானோர் குறித்து வழங்கும் கதைகளே இடையிடையே எடுத்துக் கூறிப் பாராட்டியும் உள்ளனர். அதனால் அவர் இலக்கியங்களை மக்கள் மகிழ்ந்து கற்கலாயினர்.

சமணரும், பெளத்தரும் இவ்வாறு, இலக்கியத்திரையிட்டுத் தம் சமயங்களை வளர்ப்பது கண்ட சைவர்களும், வைஷ்ணவர்களும், தாமும் மக்கள் விரும்பும் இலக்கியங்களை இயற்ற முனைந்தனர். அவ்வாறு இயற்றத்