பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

இலங்கைக் காட்சிகள்

இந்த வதந்திகளுக்குக் காரணம் கதிர்காமக் கோயில் சம்பந்தமான இரகசியம் ஏதோ ஒன்று இருப்பதுதான்' என்று எண்ணினேன். அந்த இரகசியத்தை நான் நேரிலே போய் ஆராய்ந்தும், விசாரித்தும், ஊகித்தும், துப்பறிந்தும் சிறிதளவு கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கதிர்காமத் தல தரிசனத்தில் இயற்கையாக இருந்த வேகம், இரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆகிய இரண்டும் சேர்ந்துகொண்டன.



கதிர்காமத்துக்கு வந்துவிட்டோம். கோயில் தெரியவில்லை. ஊரும் தெரியவில்லை. மாணிக்க கங்கை என்ற ஆற்றின் கரையை வந்து அடைந்தோம். அங்கே பக்தர்களுக்குத் தேங்காய் பழம் விற்கும் கடை ஒன்று இருந்தது. மாணிக்க கங்கையின் அக்கரை தான் கதிர்காமம் என்றார்கள்.

இரு மருங்கும் மிக உயர்ந்த மருத மரங்கள் அடர்ந்து ஓங்கி நிற்கச் சலசலவென்று மாணிக்க கங்கை என்ற சிற்றாறு ஒடிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் எல்லா ஆறுகளையும் கங்கையென்றே சொல்கிறார்கள். ஆறு குறுகியதுதான்; ஐம்பது அடி அகலம் இருக்கும். ஆற்றங்கரையில் உள்ள கடைக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு மாணிக்க கங்கையில் நீராடப் புகுந்தோம். நாங்கள் அங்கே சென்றபோது பகல் பதினொரு மணி இருக்கலாம். வெயில் வேளையாகையால் ஆற்று நீரில் ஆடியது சுகமாக இருந்தது. நன்றாக நீராடிய பிறகு தேங்காய் பழம் முதலியவற்றை வாங்கிக் கொண்டோம். காரை ஆற்றிலே இறக்கி