இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணீரால் எழுதப்பட்டது
திராவிட மன்னர்கள்
தருமராஜன் போல் நாட்டைச் சூதாட்டத்தில் தோற்றதில்லை.
அரிச்சந்திரன்போல் நாட்டை முனிவருக்குத் தானம் செய்ததில்லை.
திராவிடக் கவிஞர்கள்
அதல சுதல பாதாளமென அண்டப்புளுகு எழுதவில்லை.
கண்ட கண்ட உருவெடுத்தார் கடவுள் எனக் கதை தீட்டவில்லை.
காலடியில் புரண்டு தொழுதால் கடாட்சம் என்று கூறவில்லை.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றனர்.
திராவிடர்
உயிர்வாழ மானத்தை இழந்ததில்லை.
உறுதியின்றி உலுத்தராய் இருந்ததில்லை.
சூது, சூட்சியை ஆயுதமாகக் கொண்டதில்லை.
சுதந்திர வாழ்வுக்காக உயிரையும் தந்தனர்.
திராவிடம்
அன்னிய ஆட்சிக்கு அடிமைப்பட்டிருக்கவில்லை.
பஞ்சமும் பிணியும் பதைப்பும் கண்டதில்லை.
பாட்டாளி பதைக்கப் பார்த்துச் சகித்ததுமில்லை.
உழைப்பால் உயர்ந்து உரிய இடம் பெற்றது உலகில்.