பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

5


இந்த மாகாணத்தில் இனி நாம்தான் 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஓட்டர்களாகவும் ஆக்கப்படப்போகிறோம். பெரும்பாலான மந்திரிகள், உத்தியோகஸ்தர்கள் திராவிடர்களாகத்தான் இருக்கப்போகிறார்கள். அதில் சந்தேகம் இருக்க நியாயமில்லை. ஆனால், இதில் என்ன குறை சொல்லலாம் என்றால், இதனால் திராவிடநாடு பிரிந்து கிடைக்குமா? திராவிடர் கழகக் கொள்கைகள், திட்டங்கள் நடைமுறைக்கு வருமா? என்பதுவேயாகும். சுலபத்தில் வராது என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், நாம்- திராவிடர்கழகத்தார்- சட்டசபைக்குப் போய்விடுவதாலோ, அரசியலைக் கைப்பற்றுவதாலோ, மந்திரிகளாய் விடுவதாலோ, திராவிடநாடு வந்துவிடுமோ, திராவிடர் கழகக் கொள்கைகளும், திட்டங்களும் அரசியல் மூலம் நடத்தப்பட்டு விடுமோ? என்று பார்த்தால் இன்றைய நிலைமையில் அவை சுலபத்தில் ஆகக்கூடிய காரியங்கள் அல்ல என்பதே நமது கருத்து.

வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது

"நம் இழிவு நீக்கம், நம் முன்னேற்றத் தடைநீக்கம், ஆரியத்தில், மூடநம்பிக்கையில் இருந்து விடுபடுதல், பகுத்தறிவாளர்களாக, மானமுள்ள சமுதாயமாக ஆவது, இப்படிப்பட்ட நம் வேலை நெருப்போடு பழகுவதுபோல் பாமர மக்களிடம் பழகுவதாகும். அவர்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அவர்களைத் திருத்தியே ஆகவேண்டும். இதற்கு நல்ல பிரச்சாரம் வேண்டும், ஒத்துழைப்புவேண்டும், ஒன்றுபட வேண்டும். நிலைகுலைந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுசேர்த்து யாவர் பலத்தையும் ஒன்றாய்த்திரட்டி ஒருமூச்சுப் பார்த்தாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இனி நாம் சூத்திரர்களாக வாழமாட்டோம் என்பதே நமது இலட்சியச்சொல், நமது மூச்சு.

வெற்றி கண்ணுக்குத் தெரிகிறது. அது கானல் நீரல்ல. கருத்தும் கவலையும் இருந்தால் கண்டிப்பாக அடைந்தே தீருவோம் என்கிற உறுதி எனக்கு உண்டு."

தலைவர் : பெரியார்.