பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 109


“குழந்த வசந்தாவோட தூங்குறான்.”

“குழந்த மட்டுந்தானே?”

மணிமேகலை, நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஜெயராஜ் அவளை முறைக்கவில்லை. அமைதியாகப் பார்த்தான், விவகாரத்தை அவளே புரிந்துகொண்டதில் அவனுக்கு சந்தோஷம். மணிமேகலை மீண்டும் பேசினாள்.

“என் பிள்ளய கொடுங்க.”

“அது எனக்கும் பிள்ளைதான்.”

“பரவாயில்ல. பிள்ளயாவது உங்களுடையதுன்னு நெனப்பிருக்கே”

“இந்தா பாரு மேகலா! எதுக்கு வீண் பேச்சு. எப்போ திருவள்ளுர் டாக்டர்கிட்ட ஒன்னை செக்கப் பண்ண கூப்பிட்டு, நீ வரமாட்டேன்னு சொல்லிட்டியோ அப்பவே ஒனக்கும் எனக்கும் சம்பந்தமில்லாம போயிட்டு.”

“நீங்க எனக்குல்லா நன்றி சொல்லணும். சாக்கு தேடிக் கொண்டிருந்த ஒங்களுக்கு தல்ல சாக்கு கொடுத்திருக்கேனே. திருவள்ளுர் டாக்டர் நல்ல மனுஷனில்லன்னு கேள்விப்பட்டேன். ராமபத்திர பெரியப்பா தூண்டுதலால எதையாவது செக் பண்ணாமலே தீர்மானம் செய்திடுவாரோன்னு பயந்தேன். வேற எந்த டாக்டர்கிட்ட வேணு முன்னாலும் போகலாமுன்னேன். நீங்கதான் கேட்கல.”

“பொறுப்பில்லாம பேசுறது எனக்குப் பிடிக்காது.”

“ஒங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதுன்னு ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொடுத்தவளே நான். இப்போ நானே பிடிக்காமல் போயிட்டேன். அப்படியும் நான் பொறுப்பில்லாம இல்ல. நேற்று டாக்டர் குமரன் நர்ஸிங் ஹோமிற்குப் போனேன். கம்ப்ளீட்டர் சுகமாயிட்டதா சொன்னார்.”