பேராசிரியர்
தொல்காப்பியப் பின்னான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரை கிடைத்துள்ளது. பேராசிரியர் என்பது சிறப்புப் பெயர் என்பது வெளிப்படை. அவர் இயற்பெயர் தெரிந்திலது.
பேராசிரியர் பலர்
சிறப்புப் பெயர் இயற்பெயருக்கு முன்னர் வருதல் வேண்டும் என இலக்கணம் கண்டது தொல்காப்பியம். அதன்படி பேராசிரியர் இன்னவர் என்பதில் ‘இன்னவர்' என்பது குறியாமல், சிறப்புப் பெயராலேயே உலகு விளங்கும் நிலைமை உண்டாயிற்று எனக் கொள்ளலாம்.
பாலாசிரியர், இளம்பாலாசிரியர், ஆசிரியர், கணக்காயனார் என்னும் சிறப்புப் பெயர்களை அடுத்துள்ள இயற்பெயர்கள் பல, சங்கச் சான்றோர் பெயர் வரிசையில் இடம் பெற்றிருப்பதை அறிவார், இதனைத் தெளிவார்.
பேராசிரியர் என்னும் பெயரால் அறியப் பெறுவார் தமிழ்ப் பரப்பில் பலருளர். ஒருவர், பேராசிரியரால் சுட்டப்படும் ஆத்திரையன் பேராசிரியர். அவரை, "வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரம் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன்" என்கிறார் (தொல். மர. 98) தொல். உரை கண்ட பேராசிரியர். இப்பாயிரத்தை முழுமையாகச் சிவஞான முனிவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியுள் காட்டியுள்ளார். இவ்வாத் திரையன் பேராசிரியரே பேராசிரியப் பெயருடையாருள் பழையர்
எனலாம்.
திருக்கோவையார்க்கு உரை கண்ட பேராசிரியர் மற்றொருவர். அவர் தொல்காப்பிய உரை கண்ட பேராசிரியரின் வேறானவர் என்பது கோவையைப் பற்றி எழுதுமிடத்தும், திருக்கோவையாரைச் சுட்டாமை யாலும், எடுத்துக்காட்டாக எங்கும் காட்டாமையாலும் விளங்கும்.
மயேச்சுரர் என்பாரும் பேராசிரியர் என்னும் பெயருடன் விளங்கு கின்றார்.யாப்பருங்கல விருத்தியாரால் பெரிதும் பாராட்டப்படுபவர் அவர். இவ்வாறே நேமிநாதரும் பேராசிரியர் எனப்படுவார்.