உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ் வளம்

22

தெரிவித்தலும் ஆகாது. அதனை நினைத்தலும் ஆகாது. அதனை யெண்ணி மனங்கலங்குதலும் ஆகாது என நீண்ட வாழ்வுக்கு வழி உரைக்கிறார்.

ஆராய்ச்சியின் நிறைவுரை

தொன்மைக்குத் தொன்மையான மொழியும் புதுமைக்குப் புதுமையானதாகவும் திகழவேண்டும். அந்நிலையே உயிரோட்ட மமைந்த ஆற்றின் போக்குப் போல என்றும் வளம் செய்வதாய் அமையும்.

எம் மொழியாயினும் தன் சொற்களைப் போற்றித் தூயதாக வைத்துக் கொள்வதுடன் புதுப்புதுக் கலைச் சொற் களையும் காலந்தோறும் துறைதோறும் பெருக்கிக் கொண்டு வருதல் வேண்டும். அதற்கு அறிவு வல்லார் இ டையறவு இல்லாமல் தொடர்ந்து பாடாற்றி வருதல் வேண்டும்.

அயற்சொற்களை அப்படி அப்படியே எடுத்தாண்டு வருவது ஒரு மொழிக்கு ஆக்கமாகிவிடாது. முயற்சியுடைய மக்கள் அந்நெறியை விலக்கி வழிகாட்டுதல் வேண்டும்.

கலைச் சொல்லாக்கமோ மொழிபெயர்ப்போ செய்யுங் கால் தம்மொழியின் இயல்பொடு பொருந்தியதாகவே செய்தல் வேண்டும். ஒலிவகையாலும் வடிவ வகையாலும் மொழியியலை மாற்றி அயன்மொழித் தோற்றத்தை ஆக்கிவிடுதல் ஆகாது.

வை பொதுவகையாக மொழியியலில் அடிகளார் கொண்ட குறிக்கோள்கள்.

அறிவியல் ஆராய்ச்சி வகையில் அடிகளார், எத்துறைக்கும் தமிழ்மொழி ஈடு தருவதே என்பதைத் தம் நூல்களாலேயே மெய்ப்பித்துக் காட்டினார். அவ்வகையில், தம்மையே ஆய்வுக் களமாகக் கொண்டு ஆராய்ந்தார். தம்மைச் சார்ந்தாரையும் அவ்வகைக்குப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டார். அவ்வத்துறையில் ஈடுபட்ட ஆய்வாளர் செயற்பாடுகளையும் நூல்களையும் ஆழ்ந்து கற்று மெய்ம்மங்கள் ஆக்கினார். நடைமுறையொடு, கூடாத பொய்ம்மை கற்பனை புனைவு வகைகளைத் துணிந்து விலக்கினார். தம் அறிவுக்குச் சரியானது என்று தோன்றியதை எந்நிலையிலும் எச்சார்பும் கடந்த துணிவொடு எடுத்துரைத்தார். பிறர் ஆய்வைத் தம் ஆய்வாகக் கொள்ளலோ, பிறர் ஆய்வை அவர் பெயர் சுட்டாது மறைத்தலோ ஆய்வு நெறி ஆகாது என்பதைத் தம் ஆய்வுகளால் நிலை நாட்டினார். இவையெல்லாம் தம் செயற்பாட்டால் தமிழ் உலகுக்கு அடிகள் காட்டிய ஆராய்ச்சி நெறி முறைகள் ஆகும்.