2. அட்டசத்தி மண்டபம்
பொன்னப்பன் : கண்ணப்பா! இதற்கு 'அட்டசத்தி மண்டபம் என்பது பெயர் என்று சொன்னேனா! பக்கத்திற்கு நான்காக இரண்டு பக்கங்களில் எட்டுத் தூண்கள் இருப்பதையும்.ஒவ்வொரு தூணிலும் ஒரு சத்தியின் சிற்பம் இருப்பதையும் பார்! இவைதாம் சத்தியின் எட்டுத் திருவுருவங்கள். அவ்வப்போது செய்யும் செயலுக்கும், இருக்கும் இயலுக்கும் ஏற்றபடி அம்மையை இவ்வெட்டு வடிவங்களில் படைத்திருக்கிறான் சிற்பி!
கண்ணப்பன் : இறைவனுக்குக் கூட எட்டு மூர்த்தங்கள் உண்டு என்பார்களே! அப்பனுக்கு ஏற்ற அம்மைதான்.
பொன் : ஆம். இடப்புறம் இருப்பவர் கெளமாரி, ரௌத்திரி, வைணவி மகாலக்குமி; வலப்புறம் இருப்பவர் எக்ஞரூபிணி, சாமளை, மகேசுவரி, மனோன்மணி! "எம்மைத் தேடி வருபவரை இனிது காப்போம்; பெருகிய அளவில் திருவருள் பாலிப்போம்" என்பவரைப் போலக் கௌமாரியும் எக்ஞ ரூபிணியும் இருப்பதைப் பார். இவர்கள் அபயவரதம் (அடைக்கலம் தருதலும், திருவருள் பாலித்தலும்) விளங்கும் கையராக இருப் பதைப் பார்!
கண்
- "கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ" என்று நாவுக்கரசர் மனித இனத்தை அழைத்து அழைத்து அருளியது போலக் கோயிலுள் நுழைந்ததும் இருபாலும் இவர்கள் காட்சி வழங்கக் கருதிப் படைத்தானே, அந்தச் சிற்பியின் திறம் பெரிதுதான்!
பொன் : கௌமாரியை அடுத்துச் சூலமும் தமருகமும் கபாலமும் (மண்டையோடும்) அரவமும் தாங்கிய வளாய்ப் பொங்கிய சினமே தங்கியவளாகிக் காட்சி வழங்குகிறாளே இவள் 'ரௌத்திரி' ரௌத்திரம் என்பதன் பொருள் கோபம். இவள் திருமுகத்தில் கோபம் பொங்கி வழிந்தாலும், கோபம் கொண்டவர் முகத்தில்