பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)
121
என்னும் குறளில் முரண் தொடையாக்கி முட்டாச் சிறப்பை எட்டச் செய்தாரல்லரோ திருவள்ளுவர். இப்படி எத்தனை எத்தனை முரண்களைத் தொகுத்து வாழ்க்கை அரண்களை அமைத்துள்ளார் அவர்!
இதோ பெரும் பொருளார், ஒரு வெண்பா இரு முரண்களை இனிதின் இயைத்து எழிலூட்டுகிறார்:
'விண்ணசை இச்செல்கின்ற வேலிளையர் ஆர்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்தன் - எண்ணம் ஒருபாற் படர்தரக்கண் டொன்னார்தம் உள்ளம் இருபாற் படுவ தெவன்'
என்பது அது.
முதல் முரண் :
இளையர், 'விண்ணசைஇச் செல்கின்றார்'
வேந்தன் 'மண்ணசைஇச் செல்கின்றான்'
என்பது. நசைஇ -விரும்பி விண் விருப்பும் மண் விருப்பும் முரண்கள் அல்லவோ!
இரண்டாம் முரண்:
இளையரும் வேந்தரும், 'ஒருபாற் படர்தரும் உள்ளத்தராதல் பகைவரோ 'இருபாற்படும்' உள்ளத்தராதல்.
தாக்கவரும் தலைவனும் வீரரும் ஒன்றுபட்ட உள்ளத்தராக வந்த வரவே, பகைவரை அஞ்சச் செய்து ஒரு நிலைப்படாத உள்ளத்தராக்கி உலைந்தோட வைத்தது என்பதாம்.
கேளின்றிக் கேளாராய் இருந்தவரே கேளாகிய பெற்றிமையின் முரணை முன்னரே கண்டுள்ளோம். (33) வெங்கண் வேந்தன் முன் வேனிலான் ஐங்கணை தோற்றமை சுட்டலும் அழகிய முரணாம் (36)
தொன்மம்:
தொன்மச் செய்திகளையும் (புராணச் செய்திகளையும்) பெரும் பொருள் விளக்கம் கொண்டமை அறிய வருகின்றது.