திருவருணைக் கலம்பகம்
100. ஒருமணி மும்மணியானது
தலைவி கையுறை ஏற்றதைத் தோழி தலைவனுக்குக் கூறல்
கட்டளைக் கலிப்பா
ஆர்வ லர்க்கழி யாவரம் நல்குவார்
அத்த னார் அரு ணாபுரி வெற்பரே,
பார்வி யப்புற நீர்தரு மாமணி
பட்ட பாடுப கர்ந்திட லாகுமோ? சார்கு ழற்கு முடிமணி யாய்இரு
கண்கள் மீதுறு கண்மணி யாய்முலை
சேர்த லுற்ற பொழுதிரு குன்றிலும்
சென்று லாவும் தினமணி ஆனதே.
(பொ-ரை)
அன்புடையவர்க்கு
161
என்றும் நிலைத்த
வரத்தை வழங்கும் சிவனாரின் அருணையம்பதித் தலைவரே, உலகோர் வியப்புறும் வண்ணம் நீவிர் தந்த சிறந்த மணி தலைவியிடம் பட்டபாட்டைக் கூற முடியுமோ? அந்த மணி நெடிய கூந்தலுக்குத் தலைமணியாகவும், இருகண்களின் மேலும் அமைந்த கண்மணியாகவும், மார்பைச் சேர்ந்த பொழுதில் இரண்டு மலைகள் மேலும் சென்று உலாவும் தினமணியாம் கதிரோனாகவும் விளங்கியது.
(வி-ரை) மாமணி, முடிமணியாகவும், கண்மணியாகவும், தினமணியாகவும் விளங்கியது என்க. சார்குழல் - நெடுங்கூந்தல், இருகுன்று என்றது, கதிரோன் தோன்றும் மலையையும், மறையும் மலையையும் 'உதயகிரி', ‘அத்தகிரி' என்பனவும் அவை. தலைவன் தலைவிக்குக் கையுறையாகச் சிறந்த மணியொன்றைத் தந்தான். அதனைத் தலைவி, தலைமேலும், கண்களின் மேலும், மார்புகளின் மேலும் வைத்துத் தழுவி இன்புற்றாள். இச் செய்கையைத் தலைவனுக்குத் தோழி உரைத்து, அவள் தலைவன்மேல் கொண்ட அன்பினை வெளிப்படுத்தாள். தினமணி ஞாயிறு.
—
'மணிகொண்ட' எனத் தொடங்கிய இத் திருவருணைக் கலம்பகம் 'தினமணி ஆனதே' என நிறைந்து அந்தாதி அழகில் ஒளி செய்தது.
(100)