14.
இரண்டரை அகவைச் சிறுமி அவள்.
தந்தை பேராசிரியர்.
தாயும் ஆசிரியர்.
கதை கதையாக நாளும் கேட்பாள்.
தடையின்றிப் பெற்றோர் சொல்வர்.
கேட்டதை மறத்தல் இல்லை; எவ்வளவு நாள்கள் ஆயினும்;
எத்தனை செய்திகள் எனினும்!
விந்தையும் வியப்பும் பெற்றோர்க்கு.
மகளை நினைத்துப் பூரிப்பு.
பெருங்கதை ஆகிய இராம காதையைத் தொடக்க முதலே உரைத்தனர்.
காதை உறுப்பினர் இருநூற்றுவர்க்கும் மேலே.
அத்தனை பேரையும் நினைவில் கொண்டாள்.
ஒருவர்க் கொருவர் உள்ள தொடர்பையும் நினைவில் கொண்டாள்.
ஒன்று என்ன, இரண்டு என்ன, ஐந்நூற்றுக்கு மேலும் இராமாயண வினாக்களைக் கேட்க, உடனுக்குடன் மறுமொழி உரைத்தாள்.
ஐந்து அகவை எட்டும்போது பாடலையும் படித்தாள். அவள் வினாவும் வினாவுக்கு விடைதரவே அறிவறி தந்தை கற்றார்; மேலும் மேலும் கற்றார்.
ஒருமுறை கேட்ட செய்தியை மறவாமை போலவே,
ஒருமுறை படித்த பாடலையும் மறவாத் திறமை அமைந்து
கிடந்தது.