10. எச்சம்
"வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்” என்பது வள்ளலார் வாக்கு.
"மரபு நிலை திரியா மாட்சி" என்பது தொல்காப்பியம்.
அன்றும் இன்றும் ஏன்? என்றும், பண்புடையவர்களால் தான் உலகம் உய்கிறது என்பது வரலாறு; வாழ்வு.
பண்பாடும் சான்றாண்மையுமே உலகங் காக்கும் தெய்வக்
குணங்கள்.
"பண்புடையார்ப் பட்டுண் டுலகம்" என்பதும்,
“உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" என்பதும் நம் முந்தையர் மொழிகள்.
வழிவழியாகப் பழிதீர் உலகக் காவலராய் வருவார், எங்கு
வருவார்?
தவத்தராயின் என், துறவர் ஆயின் என், சித்தர் ஆயின் என், அறிவர் அயின் என், அந்தண்மையர் ஆயின் என், ஈகர் ஆயின் என்? அவரெல்லாம் இல்லறக் கால்முளைகளேயாம்! ஆதலால்,
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு
என்றார் பொய்யாமொழியார்.
(60)
மக்கட்பேறு என்பது பால் பொதுமையது,ஆண்பாலா பெண்பாலா என்று சுட்டாமல் பொதுமையுரைப்பது அது,
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற”
என்பதில் வரும் மக்கட்பேறு அது.
(61)
மக்கள் என்பார் நன்மக்கள் என்றவர் அறிவறிந்த மக்கள் என்றும் சுட்டினார். அம்மட்டோ? அம்மக்கள் பழிபிறங்காப் பண்புடை மக்கள் என்றும் குறித்தார்.