22. வாழ்த்துதல் பண்பு
தொல்பழங்காலந் தொட்டுத் தமிழர் காத்து வந்ததும் இன்றும் மரபு மாறா நிலையில் போற்றப்படுவதும் ஆகிய பண்பு வாழ்த்துதல் பண்பு.
ஒருவரை ஒருவர் காணுங்கால் வாழ்த்துவது தமிழர் பண்பாடு. கண்டு கலந்துரையாடிப் பிரியுங்கால் வாழ்த்துதலும் தமிழர் பண்பாடு. சின்னஞ்சிறு துயர்வரக் காணினும் அத்துயர் அகல வேண்டுமென வாழ்த்துதலும் தமிழர் பண்பாடு. தம்மைப் பழித்தாலும் அப்பழிக்கேட்டால் பழித்தவர் எத்தகைய இடையூறும் எய்துதல் ஆகாது என வாழ்த்துதலும் தமிழர் பண்பாடு. மங்கல விழாக்களிலும் இறைவழிபாட்டிலும் வாழ்த்து இசைத்தலும் தமிழர் பண்பாடு இப்பண்பாட்டைக் கட்டிக்காத்த காவல் கடமையர் திருவள்ளுவர் என்பது திருக்குறளால் தெள்ளிதில் புலப்படும்.
நம் முந்தை வரலாற்றுப் பெட்டகமாகத் திகழும் நூல்களுள் ஒன்று பதிற்றுப் பத்து. சேர வேந்தர் பதின்மர் பாடு பொருளாக இடம் பெற்ற நூல் அது. அதில்,
"வாழ்க நின் வளனே நின்னுடை வாழ்க்கை”
என்பதொரு பாட்டின் (37) தொடக்கம்.
எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றி,ன் முதற் பத்தின் பத்துப் பாடல்களும்,
“வாழி யாதன் வாழி யவினி”
என்னும் வாழ்த்துத் தொடக்கமே உடையவை.
அப்பத்தில்,
"நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க”
“விளைக வயலே வருக இரவலர்”
"பால்பல ஊறுக பகடுபல சிறக்க”