இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நீல மலர்க்கண்
நீல மலர்க்கண் ணிரண்டு--என்றன்
நெஞ்சை மயக்கிடும் வண்டு
மாலை இருளென வளரும்--அவள்தன்
மைக்குழ லில் உளம் தளரும்
சன்னக் குழிமதுத் தேக்கும்--அதுவென்
காதலே மீறியுண் டாக்கும்
மின்னைப்போல் தோன்றும் சிரிப்பு--கொஞ்சம்
வேறுபட் டாலெங்கும் நெருப்பு
கொஞ்சும் மொழிகுயி லோசை--அதிலே
குமிழியிட் டோங்குமென் னாசை
கஞ்ச மலர்முகைக் கொங்கை--ஏந்துங்
கவின் நிறை வாளந்த மங்கை
அமுதுடன் வந்தசெய் யாளோ--என்மேல்
அன்பு சிறிதும்செய் யாளோ
எமனுக்கு நானின்று தத்தம்--மீட்கவே
எண்ணிடு மோஅவள் சித்தம்?
90